search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    பரமத்திவேலூர் பகுதியில் பூக்களின் விலை வீழ்ச்சி-விவசாயிகள் கவலை

    கொரோனா காரணமாக வார இறுதியில் 3 நாட்கள் கோவில்கள் மூடவேண்டும் என்ற உத்திரவினால் பரமத்திவேலூர் பகுதிகளில் பூக்கள் விலை வீழ்ச்சியடைந்தது.
    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தங்கப்பன் கிராமம், தண்ணீர்பந்தல், கபிலர்மலை, ஆனங்கூர், பாகம்பாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, செவ்வந்தி, ரோஜா, பன்னீர் ரோஜா, அரளி, காக்கட்டான் உள்ளிட்ட பல்வேறு பூக்கள் பயிர் செய்துள்ளனர்.

    இந்த பூக்களை பூக்கும் தருவாயில் வரும்போது கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறித்து லேசான கோணிப் பைகளில் உள்ளில் உள்ளூர் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். 

    பூக்களை ஏலம் எடுத்து செல்வதற்காக வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். 

    இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.2,700-க்கும், முல்லைப்பூ ரூ.2,600-க்கும், சம்பங்கி கிலோ ரூ.200-க்கும், அரளி கிலோ ரூ.250-க்கும், ரோஜா கிலோ ரூ.250-க்கும், செவ்வந்திப்பூ ரூ.220-க்கும் ஏலம் போனது. 

    நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.40- க்கும், அரளி கிலோ ரூ.120- க்கும், ரோஜா கிலோ ரூ.120க்கும்- பன்னீர் ரோஜா ரூ 120 க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.1400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.100- க்கும் காக்கட்டான் பூ ரூ.600க்கும் ஏலம் போனது. 
    பூக்கள் விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்தனர். 

    முகூர்த்தங்கள் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததாலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லாததாலும் பூக்கள் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×