search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணா தண்ணீர்
    X
    கிருஷ்ணா தண்ணீர்

    பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை திறக்க வேண்டாம்- தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம்

    சென்னை குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் நிரம்பி இருப்பதால் ஏப்ரல் மாதம் வரை பூண்டி ஏரிக்கு, கிருஷ்ணா தண்ணீர் திறந்துவிட வேண்டாம் என்று ஆந்திர அரசுக்கு நீர் வளத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.
    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் (11.7டி.எம்.சி.) சேமித்து வைக்கலாம்.

    வடகிழக்கு பருவமழை கடந்த 2 மாதமாக கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் நிரம்பி உள்ளன. தற்போதைய நிலவரப்படி 5 ஏரிகளிலும் மொத்தம் 10 ஆயிரத்து 971 மில்லியன் கன அடி தண்ணீர் (10.9 டி.எம்.சி.) உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 93 சதவீதம் ஆகும்.

    சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப் படி ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் வழங்க வேண்டும்.

    தற்போது சென்னை குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் நிரம்பி இருப்பதால் ஏப்ரல் மாதம் வரை பூண்டி ஏரிக்கு, கிருஷ்ணா தண்ணீர் திறந்துவிட வேண்டாம் என்று ஆந்திர அரசுக்கு நீர் வளத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி ஆகும். இதில் 3 ஆயிரத்து 122 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேலும் கிருஷ்ணா தண்ணீரை சேமிக்க பயன்படும் கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியும் முழு கொள்ளளவான 500 மில்லியன் கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. எனவே கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டால் அதனை பூண்டி, கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகளில் சேமித்து வைக்க முடியாத நிலைமை ஏற்படும்.

    இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் திறப்பை ஏப்ரல் மாதம் வரை தள்ளிவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். கோடை காலத்தை கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டால் தண்ணீரை ஏரிகளில் சேமித்து வைக்க முடியாத நிலைமை ஏற்படும்.

    சராசரியாக தற்போது மாதந்தோறும் 1,200 முதல் 1,500 மில்லியன் கனஅடி வரை தண்ணீர் குடிநீருக்காக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஏரிகளில் தண்ணீர் இருப்பை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதம் வரை கிருஷ்ணா நதி நீர் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளோம்.

    மேலும் கண்டலேறு- பூண்டி ஏரி இடையே உள்ள கிருஷ்ணா கால்வாயின் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை மார்ச் மாதத்துக்குள் சரி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணா கால்வாயில் தொடர்ந்து சிறிதளவு தண்ணீர் வந்துகொண்டு இருப்பதால் இந்த பணி மெதுவாக நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×