search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜேந்திர பாலாஜி
    X
    ராஜேந்திர பாலாஜி

    திருச்சி சிறையில் இருந்து வெளியே வந்தார் ராஜேந்திர பாலாஜி

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ராஜேந்திர பாலாஜி பாஸ்போர்ட் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு கோர்ட்டில் நேற்று ஒப்படைக்கப்பட்டது. மேலும் ஜாமின் சம்பந்தமான ஆவணங்களும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டன.
    மதுரை:

    ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அந்த வழக்கில் ஜாமின் வழங்ககோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனால் அவரை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து தலைமறைவான ராஜேந்திர பாலாஜி கடந்த 5-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    பின்பு அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும் அவர் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவரிடம் ஒப்படைக்க வேண்டும், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள போலீஸ் நிலைய எல்லையை தாண்டி பயணிக்கக்கூடாது, விசாரணை நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளையும் சுப்ரீம் கோர்ட்டு விதித்தது.

    சுப்ரீம் கோர்ட்


    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ராஜேந்திர பாலாஜி பாஸ்போர்ட் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு கோர்ட்டில் நேற்று ஒப்படைக்கப்பட்டது. மேலும் ஜாமின் சம்பந்தமான ஆவணங்களும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜேந்திர பாலாஜியை ஜாமினில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதற்கான ஆவணங்கள் திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டன. இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜேந்திர பாலாஜி ஜாமினில் இன்று காலை வெளியே வந்தார். பின்பு அவர் அங்கிருந்து தனது ஆதரவாளர்களுடன் காரில் விருதுநகருக்கு புறப்பட்டு சென்றார்.

    Next Story
    ×