search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அடுத்த கட்ட நடவடிக்கை - விசைத்தறியாளர்கள் நாளை ஆலோசனை

    கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்த்தப்படவில்லை.
    பல்லடம்:

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. 

    இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறை முகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
     
    இந்தநிலையில் கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்த்தப்படவில்லை. எனவே கூலி உயர்வு வழங்ககோரி திருப்பூர், கோவை மாவட்டத்தில் விசைத்தறியாளர்கள் கடந்த 9-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    இந்த வேலை நிறுத்தத்தால் விசைத்தறி தொழிலை சார்ந்த சைசிங், நூற்பாலைகள், ஓ.இ., மில்கள், பீஸ் செக்கிங், மடிப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் 4வது நாளாக விசைத்தறிகள் வேலை நிறுத்தம் தொடர்கிறது. 

    இதனால் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் அதனை சார்ந்து இயங்கும் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் ரூ.300 கோடி அளவுக்கு காடா ஜவுளித்துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளை ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக விசைத்தறி சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

    இதுகுறித்து பல்லடம் விசைத்தறி சங்கநிர்வாகிகள் கூறியதாவது:

    கூலி உயர்வு தொடர்பாக கோவை மாவட்ட தொழிலாளர்கள் நலத்துறை அலுவலகத்தில் இருந்து ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருந்தனர். விசைத்தறி சங்க கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் சென்றோம்.

    ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் சோமனூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மட்டுமே வந்தனர். பல்லடம், அவிநாசி ஜவுளி உற்பத்தியாளர்கள் வரவில்லை. சோமனூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் 12 சதவீத கூலி உயர்வு தருவதாக கூறினர். 

    இதனை நாங்கள் ஏற்கவில்லை. சோமனூர் ரகத்திற்கு 23 சதவீதமும், மற்ற ரகத்திற்கு 20 சதவீதமும் அறிவித்துவிட்டு உயர்த்தப்பட்ட கூலியை குறைப்பதை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தோம். இரு தரப்பிலும் பேசிய அதிகாரிகள் பேச்சுவார்த்தையை மீண்டும் ஜனவரி 20-ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். 

    இந்தநிலையில் பல்லடம் அருகே உள்ள செஞ்சேரிபுத்தூர் கருப்பராயன் கோவில் வளாகத்தில் நாளை விசைத்தறியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×