search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    வேடசந்தூர் அருகே மகன் பிறந்தநாளில் பங்கேற்க வந்தவர் விபத்தில் பலி

    வேடசந்தூர் அருகே மகன் பிறந்தநாளுக்காக கேக் வாங்கி வந்தவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    வேடசந்தூர்:

    திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகே உள்ள புதுக்குடியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35). இவருக்கு திருமணமாகி வெண்ணிலா என்ற மனைவியும், மணிஷா (9), மிர்ஷிகா (4) ஆகிய மகள்களும் தர்னிஷ் (1) என்ற மகனும் உள்ளனர்.

    கார்த்திக் கோவையில் ஒரு பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார். வெண்ணிலா தனது குழந்தைகளுடன் வேடசந்தூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார். தனது மகனின் முதலாவது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கார்த்திக் தான் வேலை பார்த்த பேக்கரியில் விதவிதமான கேக்குகளை வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பெரியகுளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (வயது 55) என்பவர் தனியார் நூற்பாலையில் இருந்து நூல் பண்டல்களை ஏற்றிக் கொண்டு லாரியில் கோவைக்கு சென்று கொண்டிருந்தார். வேடசந்தூர் - ஒட்டன்சத்திரம் சாலையில் அய்யனார் கோவில் அருகே உள்ள பாலத்தில் அந்த லாரி கார்த்திக் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.

    இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகன் பிறந்தநாளுக்கு கேக்குடன் வந்த கணவர் உயிரிழந்ததை கேட்டு மனைவி கதறி அழுதார்.

    விபத்து நடந்த இடத்தில் கார்த்திக் தன் மகனுக்காக வாங்கி வந்த கேக் அனைத்தும் சாலையில் சிதறி வீணானது. மேலும் அவர் வைத்திருந்த ரூ.11,500 பணம் மற்றும் செல்போனை மீட்டு 108 வாகன டிரைவர் ராஜா, மருத்துவ உதவியாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் டாக்டர் பிரேம்குமார் முன்னிலையில் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×