search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    மீனவர்களை விடுவிக்கக்கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்

    இலங்கை கடற்படை சிறைபிடித்த 55 மீனவர்களை விடுவிக்கக்கோரியும் இதற்கு நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ராமேசுவரம்:

    கச்சத்தீவு அருகே உள்ள நெடுந்தீவு பகுதியில் கடந்த 18-ந்தேதி ராமேசுவரம் மீனவர்கள் 43பேர், 19-ந் தேதி மண்டபம் பகுதி மீனவர்கள் 12 பேர் என மொத்தம் 55 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். மேலும் அவர்களது விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

    சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற ஜனவரி 3-ந்தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து 55 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    55 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்களையும், அவர்களது விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் மட்டுமின்றி பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த அதிர்ச்சியில் இருந்து மீளுவதற்கு முன்பாக புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் பகுதியை சேர்ந்த 14 மீனவர்கள் மற்றும் அவர்களது 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

    இலங்கை கடற்படையினர் கைது செய்த மீனவர்கள் மற்றும் அவர்களால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். மேலும் ராமேசுவரம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் இன்று மீனவர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கச்சி மடத்தில் நடந்த இந்த போராட்டத்தில் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மற்றும் மீனவர் சங்கங்களின் நிர்வாகிகள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்த மீனவர்கள், அதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இந்நிலையில் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்களும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை இன்று தொடங்கினர். நேற்று நடந்த அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மண்டபம் பகுதி மீனவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

    மண்டபம் பகுதி மீனவர்களும் தங்கச்சி மடத்தில் இன்று நடந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அவர்களது விசைப்படகுகள் அனைத்தும் துறைமுக பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு உள்ளன.

    மீனவர்கள் வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தால் ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
    Next Story
    ×