search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குடிமங்கலம் அருகே புதிதாக கட்டப்பட்ட தடுப்பணையில் விரிசல்- மழைநீர் வீணாகுவதால் விவசாயிகள் வேதனை

    குடிமங்கலத்தை அடுத்த மூங்கில்தொழுவு பகுதியில் உள்ள மழைநீர் ஓடையின் குறுக்கே கடந்த 2018-ம் ஆண்டு தடுப்பணை கட்டப்பட்டது.
    குடிமங்கலம்:

    நிலத்தடி நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதில் மத்திய-மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன. அதன்படி மழைநீர் சேகரிப்பு திட்டங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீர்ஓடைகள், ஆறுகள், நீர்வழித்தடங்கள் ஆகியவற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி மழை நீரை தேக்கி வைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    அந்த வகையில் குடிமங்கலத்தை அடுத்த மூங்கில்தொழுவு பகுதியில் உள்ள மழைநீர் ஓடையின் குறுக்கே கடந்த 2018-ம் ஆண்டு தடுப்பணை கட்டப்பட்டது. அந்த தடுப்பணையில் தற்போது விரிசல் ஏற்பட்டு பெருமளவு நீர் கசிந்து வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    மேலும் இந்த விரிசல் படிப்படியாய் பெரிதாகி தடுப்பணை சேதம் அடையும் அபாயம் உள்ளது. எனவே தடுப்பணையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனிடையே மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளான கணியூர், கிருஷ்ணாபுரம், வேடபட்டி, துங்காவி சோழமாதேவி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் தண்ணீர் குளம் போல் நிரம்பி வழிந்து வருகிறது.

    மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளன. இவை அனைத்துமே நிரம்பியுள்ளதால் அதை  சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் நன்றாகவே உயர்ந்து வருகிறது. மேலும் மடத்துக்குளம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.

    இவற்றில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் தக்காளி, கத்தரி, புடலை போன்ற காய்கறி பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தடுப்பணைகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் தோட்டத்து கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    மேலும் கோடைக்காலங்களில் தடுப்பணைகளில் உள்ள மழைநீரை பயன்படுத்தியும் சாகுபடி செய்யலாம் என்பதால் அந்தப்பகுதி விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×