search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    சப்-இன்ஸ்பெக்டருக்கு எதிரான புகாரை திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு விசாரிக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு

    கூத்தாநல்லூர் சப்-இன்ஸ்பெக்டருக்கு எதிராக குற்றச்சாட்டு உள்ளதால், இதுகுறித்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, விசாரணை நடத்தி உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நூர்நிஷா. இவர் தன் மகனுடன் சேர்ந்து, சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம், பொதக்குடி கிராமத்தில் எங்களுக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஜவகர் நிஷா, முபாரக் நாசியா, யூசப் நாசியா ஆகியோர் வாங்க முன் வந்தனர். இதற்காக முன்தொகை தந்தனர்.

    இதன்பின்னர் விலை அதிகமாக இருக்கிறது என்று கூறி பணத்தை திருப்பிக் கேட்டனர். பணத்தை உடனே திருப்பிக் கொடுக்க எங்களால் முடியவில்லை. இதையடுத்து எங்கள் மீது கூத்தாநல்லூர் போலீசில் புகார் செய்தனர். அங்குள்ள சப்-இன்ஸ்பெக்டர் இது குறித்து கட்டப்பஞ்சாயத்து செய்தார்.

    3 வாரத்தில் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறி வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டார். இதுகுறித்து திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்ய முயற்சித்தோம்.

    ஆனால், கடந்த நவம்பர் 18-ந்தேதி, சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் நிலத்துக்கு முன்தொகை கொடுத்த 3 பேரும் எங்கள் வீட்டுக்கு வந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் என் கணவரையும், என்னையும் அடித்து எங்களை வீட்டை விட்டு விரட்டினார். தற்போது எங்கள் வீட்டை அவர்கள் சட்டவிரோதமாக கையகப்படுத்திக் கொண்டனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யவும், எங்கள் வீட்டை எங்களிடம் ஒப்படைக்கவும் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு கூறியிருந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார் பிறப்பித்த உத்தரவில், ‘‘மனுதாரர் கடந்த மாதம் 27-ந்தேதி தபால் மூலம் புகார் அனுப்பியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். அவரது வீடும், வீட்டுக்குள் உள்ள விலை உயர்ந்த பொருட்களையும் சட்டவிரோதமாக கையகப்படுத்தி விட்டனர் என்றும் கூறியுள்ளார்.

    குறிப்பாக கூத்தாநல்லூர் சப்-இன்ஸ்பெக்டருக்கு எதிராக குற்றச்சாட்டு உள்ளதால், இதுகுறித்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, விசாரணை நடத்தி உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

    மேலும் அந்த உத்தரவில், ‘‘வீட்டுக்குள் அத்துமீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை யாரும் தங்கள் கையில் எடுக்கக்கூடாது என்பதை நினைவுப்படுத்துகிறேன். விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறேன்’’ என்றும் நீதிபதி கூறி உள்ளார்.

    Next Story
    ×