search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு காலில் விழுந்து கெஞ்சிய பெற்றோர் - உறவினர்கள்.
    X
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு காலில் விழுந்து கெஞ்சிய பெற்றோர் - உறவினர்கள்.

    மகளின் சாவுக்கு நீதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் காலில் விழுந்து கெஞ்சிய பெற்றோர்

    குன்னத்தூர் போலீசில் மகள் சாவில் மர்மம் இருப்பதாக நந்தினி பெற்றோர் புகார் செய்துள்ளனர்
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் புதுக்காலனி நவக்காடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி பொன்னம்மாள். இவர்களுக்கு நந்தினி (வயது 21) என்ற மகள் உள்ளார். 

    இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் பிரபு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் பிரபு தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். 

    மேலும் பிரபுவின் தந்தை ஆறுமுகம் நந்தினிக்கு பாலியல் ரீதியாகவும் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக நந்தினி கணவரிடம் கூறியபோது அவர் கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக நந்தினி பெற்றோரிடம் கூறியுள்ளார். 

    பெற்றோர் இது தொடர்பாக ஆறுமுகத்திடம் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் நந்தினியின் நடத்தை குறித்து மகனிடம் தவறாக கூறி அவர்களுக்குள் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளார். 

    இந்தநிலையில் கடந்த 30-ந்தேதி இரவு நந்தினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் நந்தினியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது ரத்த காயங்களுடன் நந்தினி பிணமாக கிடந்துள்ளார். 

    இது குறித்து குன்னத்தூர் போலீசில் மகள் சாவில் மர்மம் இருப்பதாக நந்தினி பெற்றோர் புகார் செய்துள்ளனர். போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஆர்.டிஒ. விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் மகளின் சாவுக்கு காரணமான பிரபு மற்றும் அவரது தந்தை ஆறுமுகத்தை கைது செய்யக்கோரி பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவிலைலை என தெரிகிறது. 

    இதனைத் தொடர்ந்து இன்று காலை பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நந்தினியின் சாவுக்கு நீதி கேட்டும் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    அப்போது அங்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் காலில் விழுந்து கெஞ்சியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அதிகாரிகள் இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    Next Story
    ×