search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
    மேட்டூர்:

    கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீருடன் மழை நீர் சேர்ந்து தமிழக-கர்நாடக எல்லையை கடந்து ஒகனேக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 15 ஆயிரத்து 19 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 17 ஆயிரத்து 665 கன அடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் 1000 கன அடியும், கால்வாயில் 750 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 77.67 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் சுமார் 1½ அடி உயர்ந்து இன்று 79.07 அடியானது. இனி வரும் நாட்களில் நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருவது டெல்டா பாசன விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×