search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மகளின் காதலனை வீடு தேடி சென்று அரிவாளால் வெட்டிய பெற்றோர்கள் கைது

    திருவாரூர் அருகே மகளை காதலித்த இளைஞரை வீடு தேடிச் சென்று தந்தையும், தாயும் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பக்ருதீன் அலி அகமது. இவரது மகன் முகம்மது பெமினாஸ் (வயது23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகள் கவுசல்யா (17) என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு கவுசல்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

    தனது மகளை காதலிக்கக்கூடாது என முகம்மது பெமினாஸிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளனர். அதனையும் மீறி முகம்மது பெமினாஸ், கவுசல்யாவிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கெளசல்யாவின் தந்தை விஜயகுமார் மற்றும் தாய் தீபா இருவரும் முகம்மது பெமினாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு முகம்மது பெமினாஸ் மற்றும் அவரது பெற்றோரிடம் இதுபற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் பெற்றோர் கையில் வைத்திருந்த அரிவாளால் முகம்மது பெமினாசை வெட்டிவிட்டு தப்பி சென்றனர். உடனடியாக முகம்மது பெமினாஸை உறவினர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் முகம்மது பெமினாஸின் உறவினர்கள் அடியக்கமங்கலத்தில் கவுசல்யாவின் தந்தை விஜயகுமார் வைத்துள்ள மருந்தகத்தை கற்கள் மற்றும் கட்டையால் அடித்து உடைத்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பதுங்கியிருந்த விஜயகுமார், தீபாவை கைது செய்து கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கவுசல்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பெமினாஸ் மீது போக்சா சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    Next Story
    ×