search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    நெல்லை அருகே விபத்து- 3 பேர் பலி

    நெல்லை அருகே நள்ளிரவில் மோட்டார் சைக்கிளும், மொபட்டும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் நாரைக்கிணறு அருகே உள்ள வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கர்ணன் (வயது 65). இவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்.

    நேற்று இரவு இவர் நெல்லை வந்துவிட்டு மொபட்டில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பஸ் கிடைக்காமல் நின்று கொண்டிருந்த நாரைக்கிணறு அருகே உள்ள கீழ கோட்டையை சேர்ந்த காசிமணி (36), அவரது மனைவி ஜெயலட்சுமி (24), மகன் கேசவன் (5) ஆகிய 3 பேரையும் மொபட்டில் அழைத்து கொண்டு ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கங்கை கொண்டானில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கடையநல்லூர் புன்னையாபுரத்தை சேர்ந்த முத்துக்குமார் (25), சாத்தூரை சேர்ந்த விக்னேஷ் குமார் (22) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் நெல்லையில் உள்ள நண்பரை பார்க்க வந்து கொண்டிருந்தனர்.

    கங்கைகொண்டான் 4 வழிச்சாலை திருப்பத்தில் திடீரென்று மோட்டார் சைக்கிளும், மொபட்டும் நேருக்குநேர் மோதியது. இதில் பெட்ரோல் டேங்க் உடைந்து சிதறி தீப்பிடித்தது.

    இதில் முத்துக்குமார் உடலில் தீப்பற்றி எரிந்தது. மேலும் காசிமணி, கர்ணன் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிணமானார்கள். அந்த பகுதியில் சென்றவர்கள் மீட்க வருவதற்குள் முத்துக்குமாரும் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெயலட்சுமி, அவரது மகன் கேசவன் மற்றும் விக்னேஷ்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×