search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குடிக்க பணம் தர மறுத்த மாமியாரை கொன்று நகைகளை கொள்ளையடித்த மருமகன்

    நெல்லை அருகே குடிக்க பணம் தர மறுத்த மாமியாரை கொன்று நகைகளை கொள்ளையடித்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ஜெகநாதபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் வடிவம்மாள் (வயது 63). இவருக்கு திருமலைநம்பி (30) என்ற மகனும், பரமேஸ்வரி உள்பட 2 மகள்களும் உள்ளனர். திருமலைநம்பி தனது குடும்பத்துடன் பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியில் வசித்து வருகிறார். பரமேஸ்வரியை பாளையங்கோட்டை நடுவக்குறிச்சியை சேர்ந்த கல்லத்தியான் (35) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். மற்றொரு மகளை உள்ளூரில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். ஏற்கனவே கணவர் இறந்து விட்டதால் வடிவம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில், கடந்த 13-ந் தேதி வடிவம்மாள் வீட்டில் இறந்து கிடந்தார். தாயார் இயற்கையாக இறந்து விட்டதாக நினைத்து குடும்பத்தினர் அவரது உடலை தகனம் செய்தனர்.

    இந்தநிலையில் வீட்டில் பீரோவில் இருந்த வடிவம்மாளின் நகைகள் அனைத்தும் காணாமல் போயிருந்தது. இதுபற்றி திருமலைநம்பி அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, கடந்த 12-ந் தேதி மருமகன் கல்லத்தியான் வந்து சென்றதாக தெரிவித்தனர். இதையடுத்து தனது தாயார் சாவில் சந்தேகம் இருப்பதாக மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் திருமலைநம்பி புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

    கல்லத்தியானுக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் செலவுக்காக மாமியார் வடிவம்மாளிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வாங்கிச் செல்வார். இதுபோல் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் வடிவம்மாள் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கல்லத்தியான் கடந்த 12-ந் தேதி இரவு தனது நண்பர்கள் 3 பேருடன் வடிவம்மாள் வீட்டுக்குள் நைசாக நுழைந்துள்ளார். அங்கு தனியாக தூங்கி கொண்டிருந்த வடிவம்மாளை அவர்கள் தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

    பின்னர் எதுவும் தெரியாததுபோல் கல்லத்தியான் மாமியாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கல்லத்தியான் உள்பட 4 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட 10 பவுன் நகைகளையும் மீட்டனர்.
    Next Story
    ×