search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா தடுப்பூசி செலுத்திய கர்ப்பிணி வயிற்றில் இருந்த சிசு பலி

    தேனி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மேலசொக்கநாதபுரம்: 

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பத்ரகாளி புரத்தைச் சேர்ந்தவர் ஜெகன்ராஜ் (வயது 29). இவரும் இருதயரோஸி சில்வியா (23) என்பவரும் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ரோஸி சில்வியா கர்ப்பிணியாக இருந்த நிலையில் டொம்புசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.

    கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதால் இருதய ரோஸி சில்வியாவையும் தேனி அரசு மருத்துவக்கல்லூரிக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு சுகாதார நிலைய ஊழியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

    6 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டார். பின்னர் அவர் வயிற்றில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை தெரிந்து கொள்வதற்காக தனியார் பரிசோதனை நிலையத்தில் ஸ்கேன் எடுத்துள்ளார்.

    அப்போது குழந்தை அசைவின்றி காணப்படுவதாகவும் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொண்டு பரிசோதனை செய்யுமாறு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஸ்கேன் பரிசோதனை அறிக்கையுடன் டொம்புசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற இருதய ரோஸி சில்வியா தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரது வயிற்றில் இருந்த சிசு கடந்த சில நாட்களுக்கு முன்பே இறந்திருக்கும் என்றும் தெரிவித்தனர்.

    தற்போது இருதய ரோஸி சில்வியா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். சிசு இறப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல என்றும் தலைபிரசவம் என்பதால் அவருக்கு இயற்கை முறையில் பிரசவம் நடத்தி சிசுவை ஆய்வு செய்த பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    தேனி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த வாரம் உயிருடன் பிறந்த குழந்தையை இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். அந்த குழந்தையை அடக்கம் செய்ய சென்ற போது அது உயிருடன் இருந்ததை கண்டு மீண்டும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். ஆனால் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெரியகுளத்தைச் சேர்ந்த 3 மாத பெண் குழந்தை தடுப்பூசி செலுத்திய மறுநாளே உயிரிழந்தது. நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த சிசு இறந்துள்ளது. இது போன்ற தொடர் சம்பவங்களால் பெற்றோர்கள் மற்றும் மகப்பேறுக்காக சிகிச்சை பெறுபவர்கள் பீதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×