search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    தமிழகம் தன்னிகரற்ற மாநிலம் ஆக வேண்டும்- மாநில வளர்ச்சி கொள்கை குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

    மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு, தமிழ்நாடு அரசு செல்ல வேண்டிய பாதைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் ஒரே சீரான மேம்பாடு அடைந்த பகுதிகளாக மாறவேண்டும் என்றும், பின்தங்கிய சமூகம், பின்தங்கிய மக்கள் என்று யாரும் இருக்கக்கூடாது என்ற வகையில் 5 ஆண்டுகள், பத்து ஆண்டுகள் ஆனாலும் கரையாத, நிலையான வளர்ச்சியை தமிழ்நாடு அடையவேண்டும் என்றும் அதற்கான திட்டமிடுதல்கள் ஒவ்வொரு துறையிலும் தேவை.

    பொருளாதார வளர்ச்சியும், சமூக நலத்திட்டங்களும் ஒன்றுக்கொன்று கைகொடுத்து செயல்பட்டதால்தான், தமிழ்நாடு வளர்ச்சி அடைந்தது என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்து பாராட்டினார்.

    ‘தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது ஏற்றுமதி, இறக்குமதி மட்டும் அல்ல, நிதி மூலதனம் அல்ல, வளர்ச்சி என்பது அனைத்துத்தரப்பு மக்களின் வளர்ச்சியாக இருக்க வேண்டும். மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு, தமிழ்நாடு அரசு செல்ல வேண்டிய பாதைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ வேண்டும்’ என்றும், மாநிலத்தின் வளர்ச்சிக்கான நல்வழியினைக் காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக வரவேற்றுப் பேசிய மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத்தலைவர் ஜெயரஞ்சன், இந்தக் குழுவின் செயல்பாடுகள் குறித்தும், பல்வேறு திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

    இதில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன். உறுப்பினர்கள் பேராசிரியர் இராம. சீனுவாசன், பேராசிரியர் விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், மு. தீனபந்து, டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ., மல்லிகா சீனிவாசன், அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன் முனைவர் நர்த்தகி நடராஜ், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×