search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தென்னையில் ஊடுபயிராக கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள்

    தற்போதைய நிலையில் கரும்பு சாகுபடி என்பது சற்று சிரமமானதாகவே உள்ளது.
    மடத்துக்குளம்

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், குமரலிங்கம் பகுதிகளில் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.இந்தநிலையில் ஆண்டுப்பயிரான கரும்பு சாகுபடியிலிருந்து நீண்ட நாட்கள் பயிரான தென்னை சாகுபடிக்கு பல விவசாயிகள் மாறி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணங்களாக தண்ணீர்ப்பற்றாக்குறை, கூலி ஆட்கள் பற்றாக்குறை, இடுபொருட்கள் விலை உயர்வு, கரும்புக்கு போதிய விலையின்மை போன்றவை உள்ளது. 

    இந்தநிலையில் ஒரு சில விவசாயிகள் தென்னையில் ஊடுபயிராக கரும்பு சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    தற்போதைய நிலையில் கரும்பு சாகுபடி என்பது சற்று சிரமமானதாகவே உள்ளது. இதனால் கரும்பு சாகுபடி செய்த பல விவசாயிகள் மாற்றுப்பயிர்களை சாகுபடி செய்யத்தொடங்கி விட்டனர். தற்போது தென்னையில் ஊடுபயிராக கரும்பு சாகுபடி செய்திருந்தாலும் இது முழுமையாக கரும்பு சாகுபடி செய்து வந்த பூமிதான். 

    அதில்தான் தென்னை மரங்களை நடவு செய்து வளர்த்து வருகிறோம். அவை முழுமையாக வளர்ந்து பலன் தரும் வரை கூடுதல் வருமானத்துக்காக ஊடுபயிராக கரும்பு சாகுபடியை தொடர்ந்து செய்து வருகிறோம். இவ்வாறு தொடர்ச்சியாக கரும்பு சாகுபடி மேற்கொள்ள முடியுமா? அல்லது மற்றவர்களைப்போல் நாங்களும் காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களுக்கு மாறவேண்டிய சூழல் வருமா? என்பது தெரியவில்லை.ஆனால் கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் கரும்பு சாகுபடிப்பரப்பு படிப்படியாகக் குறைவதைத் தடுக்க முடியாது.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
    Next Story
    ×