search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது

    சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் தனக்கு ரூ.55லட்சம் தரவேண்டும். இல்லையென்றால் வெளி யிட்டு விடுவேன் என்று மாணவியின் சகோதரரை வாலிபர் மிரட்டியுள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி கருவலூரை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 24). கல்லூரி மாணவர். இவர் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் தோழியின் ஆபாச புகைப்படத்தை அந்த பெண்ணின் சகோதரர் வாட்ஸ்அப்புக்கு கடந்த 5-ந்தேதி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதைபார்த்த பெண்ணின் சகோதரர் அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவுப்படி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    நவீன்குமாரை பிடித்து விசாரித்ததில் அவரது செல்போனில் கல்லூரி தோழியின் ஆபாச படங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம்  நடத்திய  விசார ணையில் பரபரப்பு தகவல் கிடைத்தது. நவீன்குமார் கல்லூரியில் படித்து வந்ததுடன் விசைத்தறி கூடமும் நடத்தி வந்துள்ளார். அவரது வீட்டின் அருகில் வசிக்கும் கல்லூரி மாணவியைத்தான் அவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த மாணவி நவீன்குமார் காதலை ஏற்க மறுத்துவிட்டார்.

    இதனிடையே நவீன்குமாருக்கு விசைத்தறி தொழிலில் ரூ.7 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டது. தொழிலில் நஷ்டம், காதல் தோல்வியால் மனமுடைந்த நவீன்குமார் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்து  வந்தார். தனக்கு ஏற்பட்ட கடனை அடைக்க கல்லூரி மாணவியை ஆபாசபடம் எடுத்து பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று மாணவி வீட்டின் குளியலறையில் குளித்து கொண்டிருந்த போது நவீன்குமார் ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

    பின்னர் மாணவியின் சகோதரரை தொடர்பு கொண்டு உனது தங்கையின் ஆபாச வீடியோக்கள் என்னிடம் உள்ளது. அதனை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் தனக்கு ரூ.55லட்சம் தர வேண்டும். இல்லையென்றால் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். மேலும் மாணவியின் சகோதரரை நம்ப வைக்க அவரது வாட்ஸ் அப்புக்கு மாணவியின் ஆபாச வீடியோக்களை படம் எடுத்து அனுப்பியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் சகோதரர் உடனே இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி நவீன்குமாரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம்  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
    Next Story
    ×