search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருப்பூர் மாநகரில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு - செவிலியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

    திருப்பூர் மாநகரில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியில் 3 லட்சத்து 63 ஆயிரத்து 155 பேர், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளன. இவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி நகர ஆரம்ப சுகாதார மையங்களில் போடப்பட்டு வருகிறது.

    இதுவரை 14,000 பேருக்கு முதல் தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. பத்தாயிரம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 95 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டி இருக்கிறது. ஆனால் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு அதிகளவில் உள்ளது.

    இதன் காரணமாக நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை முதல் மதியம் வரை மக்கள் காத்திருந்து கொரோனா தடுப்பூசி போட முடியாமல் திரும்பிச் செல்கிறார்கள். தடுப்பூசி குறைந்த அளவு வருவதால் மக்களுக்கு போட முடியவில்லை என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். இதனால் பல ஆரம்ப சுகாதார மையங்களில் அங்கிருக்கும் செவிலியர்களுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. அங்கு போலீசார் வந்து சமாதானம் செய்து வருகின்றனர்.

    இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுமாரிடம் கேட்டபோது “திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நாளொன்றுக்கு 3 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் அளவுக்கு ஊழியர்கள் தயாராக உள்ளனர். ஆனால் நாளொன்றுக்கு 500 பேருக்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே பல பகுதிகளில் மக்களுக்கு தடுப்பூசி போட முடியாமல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளது” என்றார்.
    Next Story
    ×