search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவில்பட்டியில் காதலனுடன் விஷம் குடித்த பிளஸ்-2 மாணவி பலி

    கோவில்பட்டியில் காதலனுடன் விஷம் குடித்த பிளஸ்-2 மாணவி பரிதாபமாக இறந்தார். காதலன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுகிராமம் 6-ஆவது தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் பாண்டிதுரை (வயது 22). இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவிக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில், பாண்டிதுரையும், அந்த மாணவியும் திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. மாணவிக்கு 17 வயது என்பதால் 18 வயது முடிந்த பின் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என இருவீட்டார் சார்பிலும் கூறப்பட்டு வந்தது. இதனால் பாண்டிதுரை சில நாட்களுக்கு முன்பு விஷம் அருந்தி சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பாண்டிதுரையும், அந்த மாணவியும் நேற்று வேலாயுதபுரம் ரெயில்வே கேட் அருகே சந்தித்து விஷ குடித்ததாகவும், பின்னர் இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மாணவி அவரது வீட்டில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதேபோல, வீட்டில் மயங்கி கிடந்த பாண்டிதுரையையும் அவரது உறவினர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×