search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மணல் கடத்திய 9 பேர் கைது

    மணல் கடத்திய 9 பேர் கைது செய்யப்பட்டனர். பொக்லைன் எந்திரம், லாரி பறிமுதல் செய்யப்பட்டன.
    ஜீயபுரம்:

    திருச்சி கம்பரசம்பேட்டை கூடலூர் பகுதியில் அனுமதியின்றி சிலர் மணல் அள்ளுவதாக கம்பரசம்பேட்டை கிராம நிர்வாக அதிகாரி அருண்தேவி ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், ஜீயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணல் அள்ளி சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் தீனா என்கிற தினேஷ் (வயது 26), சுப்பிரமணி மகன் அரவிந்த்குமார்(25) ஆகிய 2 பேரை கைது செய்தார். மேலும், உறையூர் மேலபாண்டமங்கலத்தை சேர்ந்த முருகவேல் (38) என்பவர் குழுமணி அருகே உள்ள பேரூர் பகுதியில் மணல் அள்ளி மோட்டார் சைக்கிளில் கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டார். அவர்கள் இருவருரிடம் இருந்தும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

    காட்டுப்புத்தூரை அடுத்த மேலக்காரைக்காடு மேட்டாங்காடு தெருவை சேர்ந்த கண்ணன் மகன் குமரேசன் (21). இவர், சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் மேல கரைக்காடு பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து மணல் அள்ளி மூட்டையாக கட்டி கடத்தி வந்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த எம்.புத்தூர் கிராம நிர்வாக அலுவலர் குகன் அவரை பிடித்து காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் காட்டுப்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா, மணல் கடத்திய குமரேசனை கைது செய்தார்.

    பெட்டவாய்த்தலை அருகே காவிரி ஆற்றில் இருந்து மணல் அள்ளி சாக்கு மூட்டைகளில் கட்டி மோட்டார் சைக்கிள்களில் கடத்தி சென்ற பழங்காவேரி பகுதியை சேர்ந்த பிரபு (40), பரிசல்துறையை சேர்ந்த தனபால்(35), அதே பகுதியை சேர்ந்த இளையராஜா (25), ராகுல் (22) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தொட்டியம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருஈங்கோய்மலை அருகே உள்ள கொக்கு வெட்டியான் கோவில் காவிரி ஆற்றுப் பகுதியில் பொக்லைன் மூலம் லாரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த லாரி உரிமையாளர் முசிறி குஞ்சாநாயக்கன் பாளையத்தை சேர்ந்த சூரியகுமார் (45), முசிறி அந்தரப்பட்டி ரோடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (70) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பொக்லைன் எந்திரம் மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×