search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சரவணம்பட்டியில் அண்ணி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த வாலிபர்

    சரவணம்பட்டியில் ஏற்கனவே தந்தையை கொன்று கைதானவர் அண்ணி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை சரவணம்பட்டி லட்சுமி நகரை சேர்ந்தவர் குமாரவேல் (வயது 32). வேலை இல்லாமல் வீட்டில் இருந்தார்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு குமாரவேல் செலவுக்கு பணம் கேட்டு தனது தந்தை கிருஷ்ணனிடம் தகராறு செய்தார். அவர் பணம் தரமறுத்ததால் ஆத்திரம் அடைந்த குமாரவேல் அருகில் கிடந்த கட்டையை எடுத்து தந்தையின் தலையில் அடித்துக்கொலை செய்தார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குமாரவேல் ஜாமீனில் வெளியே வந்தார். வெளியே வந்த அவர் அவ்வப்போது பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார்.

    குமாரவேலின் அண்ணன் சக்திவேல் மனைவி சிந்துவுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். தந்தை பெயரில் உள்ள கியாஸ் சிலிண்டர் தனக்கு வேண்டும் என்று கேட்டு கடந்த சில நாட்களாக அண்ணனிடம் தகராறு செய்து வந்தார்.

    இந்நிலையில் இது குறித்து பேச நேற்று மோட்டார் சைக்கிளில் அண்ணன் வீட்டுக்கு சென்றார். அங்கு கியாஸ் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அவரது மனைவி தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த தம்பி குமாரவேல் மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை பாட்டிலில் பிடித்து வந்து அண்ணி மீது ஊற்றி கண் இமைக்கும் நேரத்தில் தீ வைத்தார்.

    தீ மளமளவென சிந்துவின் உடல் மீது பற்றி எரிந்தது. பற்றி எரிந்த தீயேடு அங்குமிங்கும் ஓடினார். இதனைபார்த்த அவரது கணவர் மனைவி மீது பற்றி எரிந்த தீயை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அணைத்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிந்துவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மீண்டும் குமாரவேலை கைது செய்தனர்.

    Next Story
    ×