search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரமசிவம்- நாகப்பன்
    X
    பரமசிவம்- நாகப்பன்

    பெண்ணிடம் சங்கிலியை பறித்த கொள்ளையர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

    திருக்காட்டுப்பள்ளி அருகே பெண்ணிடம் சங்கிலியை பறித்த கொள்ளையர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
    திருக்காட்டுப்பள்ளி:

    தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியை அடுத்த பிரமன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா (வயது42). இவரது மனைவி பழனிபாப்பா (38). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு பழனிபாப்பா குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கதவை திறந்து உள்ளே வந்த மர்மநபர்கள் பழனிபாப்பாவின் கழுத்தில் கிடந்த 5½ பவுன் சங்கிலியை பறித்துவிட்டு தப்பி ஓடினர்.

    அப்போது கண்விழித்த பழனிபாப்பாவும், அவரது மகன்களும் கூச்சலிட்டனர். இதனை அறிந்த ஊர்மக்கள், இளைஞர்கள் தப்பி ஓடிய கொள்ளையர்களை பிடிக்க விரட்டினர். இதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற 2 பேரும் வயல்வெளியில் பதுங்கி இருந்தனர்.

    இதனை பார்த்த பொதுமக்கள் பதுங்கி இருந்த 2 பேரையும் பிடித்து திருக்காட்டுப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் தஞ்சை அருகே உள்ள மானோஜி பட்டியை சேர்ந்த நாகப்பன் (வயது 43), பரமசிவம் (41), கணேசன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில் கணேசன் தப்பி ஓடிவிட்டார். இந்த 3 பேர் மீதும் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த சங்கிலியை பறிமுதல் செய்தனர். துணிச்சலுடன் நள்ளிரவில் விரட்டி சென்று கொள்ளையர்களை பிடித்த பொதுமக்களை பலரும் பாராட்டினர்.
    Next Story
    ×