search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சின்னசேலம் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

    சின்னசேலம் அருகே மது குடிக்கமாட்டேன் என்று சத்தியம் செய்த கணவர் மீண்டும் மது குடித்து விட்டு வந்ததால் மனமுடைந்த பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    சின்னசேலம்:

    சின்னசேலம் அருகே பாண்டியன் குப்பம் கலைஞர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 30). தொழிலாளி. இவரது மனைவி பிரபாவதி(24). கார்த்திகேயன் தொடர்ந்து மது குடித்து வந்ததால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று இனிமேல் மது குடிக்க மாட்டேன் என்று பிரபாவதியிடம் கார்த்திகேயன் சத்தியம் செய்தார்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கார்த்திகேயனை பிரபாவதி தட்டிக் கேட்டார். அப்போது கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இரவில் அவர்கள் தூங்கசென்றனர். நள்ளிரவு 12 மணியளவில் படுக்கையில் இருந்த பிரபாவதியை காணாமல் அதி்ர்ச்சி அடைந்த கார்த்திகேயன் அவரை தேடி அலைந்தார். ஆனால் எங்கு தேடியும் பிரபாவதியை காணவில்லை.

    பின்னர் மறுநாள் காலையில் பார்த்தபோது வீட்டின் அருகில் உள்ள விவசாய கிணற்றின் அருகில் பிரபாவதியின் காலணி இருந்தது. இதனால் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

    இதுபற்றிய தகவல் அறிந்து சின்னசேலம் தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி பிரபாவதியை தேடினர். அப்போது தண்ணீரில் மூழ்கி பிரபாவதி பிணமாக கிடந்ததை பார்த்து அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் பிரபாவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுகுடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்த கணவர் மீண்டும் மது குடித்துவிட்டு வந்ததை நினைத்து மனவேதனை அடைந்த பிரபாவதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×