search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவை விமான நிலையத்தில் போதை பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது

    கோவை விமான நிலையத்தில் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    கோவை:

    கோவை விமான நிலையத்தில் கடந்த 5-ந் தேதி காலை பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது திருச்சி துவாக்குடியை சேர்ந்த டிரைவர் நாகரத்தினம், தான் கொண்டு வந்த சூட்கேசை அதிகாரிகளிடம் கொடுத்தார். அவர், தனது நண்பர்கள் கொடுத்த அந்த சூட்கேசுக்குள் என்ன இருக்கிறது என்று சந்தேகம் உள்ளதாக கூறினார்.

    உடனே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அந்த சூட்கேஸை சோதனையிட்டு, 1.2 கிலோ “மெத்தாம்பிட்டமின்“ என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து நாகரத்தினம் கொடுத்த தகவல்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சூட்கேஸ் கொடுத்த 2 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திருச்சி துவாக்குடியை சேர்ந்த டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வந்த அருள் (53) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    போலீசாரின் விசாரணையில், அலிபாய் என்பவருக்கு முக்கிய தொடர்பு இருப்பதும், அவர், போதைப்பொருளை நாகரத்தினத்துக்கு தெரியாமல் கொடுத்து சார்ஜாவுக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அலிபாயை (40) போதைபொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலின் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×