search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    திருச்சி ஓட்டலில் 15 வருடங்களாக வேலை செய்த புரோட்டா மாஸ்டர் திடீர் மரணம்

    திருச்சியில் உள்ள ஓட்டலில் 15 வருடங்களாக புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தவர் திடீரென உயிரிழந்தார். அவரைப்பற்றிய தகவல் தெரியாமல் தங்க வைத்தது எப்படி? என போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.









    திருச்சி ஜங்ஷன் ராக்கின்ஸ் சாலையிலுள்ள ஸ்ரீசரஸ்வதி கபே ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தவர் ராஜா (வயது 52). வழக்கமாக காலையிலேயே எழுந்து சமையல் வேலையைத் தொடங்கும் இவர், நேற்று பணிக்கு வரவில்லை. இதனால் சந்தேகத்தின் பேரில் உடன் பணியாற்றும் மற்ற தொழிலாளர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது அவர் மயங்கிய நிலையில் துடித்துக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்சில் ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கண்டோன்மெண்ட் போலீசார் உடனடியாக அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அதிக அளவு மது குடித்ததன் காரணமாக அவர் உயிரிழந்ததாக போலீசாரிடம் ஓட்டல் ஊழியர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இறந்து போன ராஜா எந்த ஊரை சேர்ந்தவர், அவரது முகவரி, மனைவி குடும்பம் எதுவும் உண்டா? என்று போலீசார் விசாரித்தனர்.

    அப்போது ஓட்டல் நிர்வாகத்தினர் அது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், 15 வருடங்களாக இங்கு தங்கியிருந்து வேலை செய்து வந்ததாகவும் கூறி இருக்கிறார்கள். ஓட்டல் நிர்வாகத்தினர் இப்படிக் கூறியது போலீசாருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    15 வருடங்களாக முகவரி தெரியாத ஒருவரை எப்படி ஓட்டலில் தங்க வைத்து வேலை செய்ய விட்டீர்கள்? அவர் பயங்கரவாதியாகவோ அல்லது சமூக விரோதியாகவோ இருந்திருந்தால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பது? அவர் இதுவரை விடுப்பு எடுத்து சொந்த ஊருக்கு செல்லவில்லையா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அதிரடி விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் ஊழியர் ராஜா அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணம் உண்டா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×