search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சக்கரத்தை பயன்படுத்தி அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் தொழிலாளி ஈடுபட்டதை படத்தில் காணலாம்.
    X
    சக்கரத்தை பயன்படுத்தி அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் தொழிலாளி ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

    கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

    பெரம்பலூர் அருகே கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    பெரம்பலூர்:

    திருக்கார்த்திகை தீப திருநாளன்று பொதுமக்கள் தங்களது வீடுகளில் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். குறிப்பாக அகல் விளக்குகளை பயன்படுத்தி தீபம் ஏற்றுவார்கள். இந்த ஆண்டு வருகிற 29-ந் தேதி கார்த்திகை தீப திருவிழாவாகும். இந்நிலையில் பெரம்பலூர் தாலுகா குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் அகல் விளக்கு தயாரிக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

    பாளையம், கோவில்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் மண்பாண்ட தொழிலாளர் குடும்பத்தினர், காலங்காலமாக அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் அகல்விளக்குகள் தரமாக இருப்பதால், வியாபாரிகள் இங்கு வந்து ஆர்டர் கொடுத்து அவற்றை வாங்கி செல்கின்றனர். இதனால் இப்பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சிறிய அகல்விளக்கு ஒன்று ரூ.2-ல் இருந்தும், பெரிய அகல்விளக்கு ஒன்று ரூ.15-ல் இருந்தும், கோவில் விளக்கு ஒன்று ரூ.20-ல் இருந்தும் விற்பனை செய்யப்படுகிறது.

    இது குறித்து மண்பாண்ட தொழிலாளி பாளையம் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி கூறுகையில், எங்கள் குடும்பம் பரம்பரை, பரம்பரையாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறது. சக்கரத்தை பயன்படுத்தி அகல்விளக்கு தயாரித்து வருகிறோம். ஒரு சிலர் கிரைண்டர் மூலம் அகல்விளக்கு தயாரிக்கிறார்கள். ஏரியில் இருந்து களிமண் கொண்டு வர, ஒரு லோடுக்கு ரூ.3 ஆயிரத்திற்கு மேல் கொடுக்க வேண்டியுள்ளது. மூலப்பொருட்கள் விலையும் அதிகரித்துள்ளது. இருப்பினும், திருக்கார்த்திகையையொட்டி, வியாபாரிகள் எங்களை நம்பி ஆர்டர் கொடுக்கின்றனர். இதற்காக அகல் விளக்கு தயாரிக்க அதிகமாக உழைக்கிறோம்.

    ஆனால், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. கோவில்களில் அகல்விளக்குகளில் தீபம் ஏற்றுவதற்கு பக்தர்களுக்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும். அப்போது தான் எங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். இந்த தொழிலில் அதிக அளவு வருமானம் கிடைக்கவில்லை என்றாலும் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த தொழிலில் ஈடுபட்டு கொண்டிருக்கிறேன், என்றார்.

    மண்பாண்ட தொழிலாளி பிச்சை கூறுகையில், மண்பாண்ட தொழிலில் போதிய வருமானம் கிடைக்காததால், அடுத்து வரும் தலைமுறையினர் இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு விரும்பம் இல்லாமல் இருக்கின்றனர். கிடைக்கின்ற மற்ற வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர். பாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் இருப்பினும், தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு சிலர் தான் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவித்தொகை மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன், மாறுபட்ட வேகத்துடன் கூடிய சீலாவில் மின்சக்கரங்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தொழிலை நசுங்காமல் பாதுகாக்க தொழிலாளர்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பது மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கையாகும், என்றார்.
    Next Story
    ×