search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடத்தல்
    X
    கடத்தல்

    ஆம்பூர் அருகே நகைக்கடை அதிபர் கடத்தல்

    ஆம்பூர் அருகே நகைக்கடை அதிபரை காரில் கடத்தி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மூங்கில் மண்டி தெருவை சேர்ந்தவர் திலீப்குமார் (51), நகைக் கடை அதிபர். இவருக்கு சொந்தமான நிலம் விண்ணமங்கலம் ஊராட்சி காட்டுக்கொல்லை பகுதியில் உள்ளது. அந்த நிலத்தை விற்பனை செய்வதற்காக இடத்தை காட்ட வேண்டுமென சில இடைத்தரகர்கள் அவரை அந்த நிலம் உள்ள இடத்திற்கு அழைத்துள்ளனர்.

    திலீப்குமார் தன்னுடைய காரில் அங்கு சென்றார். இடத்தை காட்டிய பிறகு காரில் ஏற முயன்றபோது அங்கு கார்நாடக மாநில பதிவெண் கொண்ட ஒரு கார் வந்தது.

    அந்த காரிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள் திலீப்குமாரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். திலீப்குமாரின் கார் டிரைவர் சேகர் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பிறகு அவர் அங்கிருந்து திலீப்குமாரின் வீட்டிற்கு சென்று கடத்தப்பட்டது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து திலீப்குமாரின் சகோதரர் மனோகர்லால் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் நகைக்கடை அதிபரை கடத்தி சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×