search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல் அருவி
    X
    ஒகேனக்கல் அருவி

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக சரிவு

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக சரிவடைந்தது.
    பென்னாகரம்:

    கர்நாடக, தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வந்தது. தற்போது மழை பெய்வது குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இருப்பினும் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை கர்நாடக, தமிழக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இதனிடையே நேற்று ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி செய்தனர்.

    பின்னர் அவர்கள் தொங்கு பாலம், பார்வை கோபுரம் ஆகியவற்றில் நின்று காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர். இளைஞர்கள் மெயின் அருவி பகுதிக்கு சென்று செல்பி எடுத்து கொண்டனர். அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்ததால் கடைகள், ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
    Next Story
    ×