search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருத்தணியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த வாலிபர் கைது

    திருத்தணியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    பள்ளிப்பட்டு:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சித்தூர் ரோட்டில் திருத்தணி எம்.எல்.ஏ. பி.எம். நரசிம்மன் வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கு கீழ்பகுதியில் உள்ள அறையை ஏ.டி.எம். மையத்திற்கு வாடகைக்கு விட்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி இரவு ஏ.டி.எம். மைய கதவுக்கான கண்ணாடிகளை உடைத்து மர்ம நபர் உள்ளே புகுந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றார். மேலும் அதே பகுதியில் உள்ள பட்டி விநாயகர் கோவில் பூட்டை உடைத்து அங்குள்ள உண்டியல் பணத்தை திருட முயற்சி செய்யப்பட்டிருந்தது.

    இந்த இரு சம்பவங்கள் குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருட முயற்சி செய்த மர்ம நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் திருத்தணியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி வந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ஏ.டி.எம். மையத்திலும், பட்டி விநாயகர் கோவிலிலும் பணத்தை திருட முயற்சி செய்த வாலிபர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டை கிராமத்தை சேர்ந்த ஜெயவேல் (வயது 20) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×