search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    பிளாட்பார தடுப்பில் மோதி விபத்து- மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் பலி

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள் 2 பேர் பிளாட்பாரத்தில் உள்ள தடுப்பில் மோதி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை கோடம்பாக்கம் சி.ஆர்.பி. கார்டன் 3-வது தெருவை சேர்ந்தவர் விஜயராகவன். இவரது மகன் அஜித்குமார் (வயது 19). இவர் அதே பகுதியில் ஏ.சி. மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இவரது நண்பர் தியாகராயநகர் ராமகிருஷ்ணா புரம் திலக் தெருவை சேர்ந்த பராந்தாமன் மகன் அஜய் (20).

    இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை வழியாக நுங்கம்பாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அஜித்குமார் ஓட்டினார். அஜய் பின்னால் அமர்ந்திருந்தார்.

    இந்தநிலையில் சுதந்திர தின பூங்கா அருகே வந்தபோது, திடீரென நிலைதடுமாறிய இவர்களது மோட்டார் சைக்கிள் சாலை ஓரத்தில் உள்ள பிளாட்பாரத்தின் தடுப்பில் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அஜய், பிளாட்பாரத்தில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அஜித்குமார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதைக்கண்ட அப்பகுதியில் வந்த வாகன ஓட்டிகள், ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அஜித்குமாரை மீட்டு ஆட்டோவில் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அஜய் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அஜித்குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் ஆஸ்பத்திரியின் பிரேத பரிசோதனை அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊரடங்கால் சாலை விபத்துகள் குறைந்து வந்த நிலையில், தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால் வாகன போக்குவரத்தும் பெருகியதையடுத்து, சென்னையில் மீண்டும் சாலை விபத்துகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    Next Story
    ×