search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கடன் தொல்லையால் தாய், மகள் தற்கொலை - மற்றொரு மகளுக்கு தீவிர சிகிச்சை

    விழுப்புரம் அருகே கடன் தொல்லையால் தாய்- மகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். மற்றொரு மகள், தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 43), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி கவிதா(37). இவர்களுடைய மகள்கள் பவித்ரா (17), ஷர்மிளா (13). இவர்களில் பவித்ரா 11-ம் வகுப்பும், ஷர்மிளா 7-ம் வகுப்பும் படித்து முடித்துள்ளனர். கஜேந்திரன், தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது.மேலும் கடந்த சில மாதங்களாக கஜேந்திரன் சரிவர வேலைக்கு செல்லாமலும், செலவுக்கு பணம் கொடுக்காமலும் இருந்து வந்ததால் குடும்பம் வறுமையில் வாடியது.

    இதனால் அவர், தனக்கு தெரிந்த சிலரிடம் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்தார். கடன் தொல்லை அதிகமானதாலும், கணவர் மதுகுடித்து விட்டு வருவதாலும் கடந்த சில நாட்களாக கவிதா மனவேதனையில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் கவிதாவுக்கும், அவரது கணவருக்கும் நேற்று முன்தினம் குடும்ப தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் கஜேந்திரன் வெளியே சென்று விட்டார். அப்போது மாலையில், கவிதா தனது 2 மகள்களையும் அழைத்துக்கொண்டு காகுப்பம் அய்யனாரப்பன் கோவிலுக்கு சென்று வருவதாக உறவினர்களிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் இரவு வெகு நேரம் ஆகியும் அவர்கள் 3 பேரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கவிதாவையும், அவரது மகள்களையும் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். இருப்பினும் அவர்களை பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.இந்நிலையில் நேற்று அதிகாலையில் விழுப்புரம் அடுத்த முத்தாம்பாளையம் ரெயில்வே தண்டவாளம் அருகே கவிதா மற்றும் அவரது மகள்கள் பவித்ரா, ஷர்மிளா ஆகிய 3 பேரும் வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர். இதை அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று கவிதா உள்ளிட்ட 3 பேரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேரையும் டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் விஷம் குடித்திருப்பதும், இதில் கவிதாவும், அவரது மூத்த மகள் பவித்ராவும் ஏற்கனவே இறந்து விட்டதும் தெரியவந்தது. ஷர்மிளாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    Next Story
    ×