search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருவேற்காடு அருகே வாலிபர் வெட்டிக்கொலை

    திருவேற்காடு அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் பகுதியில் உள்ள முட்புதரில் வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடப்பதாக திருவேற்காடு போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக போரூர் உதவி கமிஷனர் சம்பத் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு சென்று பார்த்தபோது வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலை மற்றும் கை, கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்கள் இருந்தன. மர்மநபர்கள் அவரை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    பின்னர் போலீசார், கொலையான வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையான வாலிபர் யார்? என விசாரணை நடத்தினர். அதில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் திருவேற்காடு, அன்பு நகரைச் சேர்ந்த அஜித் என்ற அஜித்குமார் (வயது 23) என்பது தெரிந்தது.நேற்று காலை மது அருந்துவதற்காக அவரது நண்பர்கள் அவரை இங்கு அழைத்து வந்து மது அருந்தி உள்ளனர். அப்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அவரை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    மேலும் அஜித்குமாரை கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு அதற்காகவே அவரை மது அருந்த இந்த முட்புதருக்குள் அழைத்து வந்து தீர்த்து கட்டியதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த பகுதியில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடந்து வருகிறது. இதனால் ஏற்பட்ட மோதலால் அஜித்குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அஜித்குமார் மீது கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு இருப்பதும், அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×