search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு தூய்மை பணியாளர்கள் மனு கொடுக்க வந்தபோது எடுத்த படம்.
    X
    நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு தூய்மை பணியாளர்கள் மனு கொடுக்க வந்தபோது எடுத்த படம்.

    தூய்மை பணியாளர்கள் குடும்பத்துக்கு ரூ.2½ லட்சம் வழங்க வேண்டும் - கலெக்டரிடம் சங்கத்தினர் மனு

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த தூய்மை பணியாளர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று நெல்லை கலெக்டரிடம் தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கால் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை. அதற்கு பதிலாக, கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. அந்த பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டு செல்கின்றனர். காணொலி காட்சி மூலம் கலெக்டர் ஷில்பா குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்தி, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டு வருகிறார்.

    தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கத்தினர் மாநில தலைவர் சக்திவேல், மாவட்ட தலைவர் சின்னத்துரை, மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர் அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தூய்மைப்பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களுடைய வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். இயற்கை பேரிடர் சிறப்பு ஊக்கத்தொகை மாதம் ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். பாதுகாப்பு கவசங்கள் வழங்க வேண்டும். முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றக்கூடிய தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

    வீர தமிழர் விடுதலை சங்கத்தினர் மாநில தலைவர் அன்புசெல்வம், பொதுச்செயலாளர் மணிமுத்து ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அங்குள்ள பெட்டியில் மனு போட்டனர். அந்த மனுவில், நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா நிலத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். அதை மீட்டு தர வேண்டும் என்று கூறி உள்ளனர்.

    மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    உடனே மாரியப்பபாண்டியன் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீஸ் அதிகாரிகள், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன் பிறகு அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், பட்டன்கல்லூரை சேர்ந்த கணபதி என்பவருடைய சொத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
    Next Story
    ×