search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குளித்தலை அருகே சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் நகைகள்-பணம் திருட்டு

    குளித்தலை அருகே சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குளித்தலை:

    குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரம் கீழகுடித்தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜா(வயது 55). இவர் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் உள்ள சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வருகிறார். கிருஷ்ணராயபுரம் வட்டம் போத்துராவுத்தன்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டியில் இருந்து தனது வீட்டிற்கு வந்த தனது மகளை, மீண்டும் கொண்டு சென்று விடுவதற்காக கடந்த மாதம் 26-ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு ராஜா தனது மனைவி, மகளுடன் வடுகப்பட்டிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து மறுநாள் காலை ராஜா தனது மனைவியுடன் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு திறந்தநிலையில் இருந்தது. இருப்பினும் வேலைக்கு செல்லும் அவசரத்தில் அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் அவர் வேலைக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் ராஜாவின் மனைவி வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த பொருட்கள் கலைந்து கிடந்தன. பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் திருட்டு போயிருந்தது.

    இதேபோல் அந்த வீட்டின் மாடியில் உள்ள அறையில் இருந்த பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பணமும் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து அவர் தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ராஜா வீட்டிற்கு வந்து பார்த்தபோது, 2 பீரோக்களில் வைத்திருந்த 7¾ பவுன் தங்க சங்கிலி, தோடு, மோதிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×