search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் ரெயில் நிலையத்திற்கு வந்த மேற்குவங்காளத்தை சேர்ந்த தொழிலாளர்களை படத்தில் காணலாம்.
    X
    கரூர் ரெயில் நிலையத்திற்கு வந்த மேற்குவங்காளத்தை சேர்ந்த தொழிலாளர்களை படத்தில் காணலாம்.

    சிறப்பு ரெயில் மூலம் மேற்குவங்காள தொழிலாளர்கள் 704 பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்

    மேற்குவங்காளத்தை சேர்ந்த 704 தொழிலாளர்கள் சிறப்பு ரெயில் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
    கரூர்:

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டன. இதைத்தொடர்்ந்து, கரூர் மாவட்டத்தில் உள்ள பிறமாநில தொழிலாளர்களில், அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் உள்ளவர்களை அனுப்பிவைக்க போதிய நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

    கரூர் மாவட்டத்தில், 14 மாநிலங்களை சேர்ந்த 7,779 தொழிலாளர்கள் வேலைசெய்து வந்தனர். இவர்களில், மொத்தம் 2,668 பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்திருந்தனர்.

    இதையடுத்து கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து சென்ற சிறப்பு ரெயில் மூலம், மேற்குவங்காளத்தை சேர்ந்த 704 பேரை, அவர்களது சொந்த மாநிலத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் அனுப்பிவைத்தார். இதில், கரூரில் இருந்து 598 பேரும், நாமக்கல்லில் இருந்து வந்த 106 பேரும் என மொத்தம் 704 பேர் மேற்குவங்காளத்திற்கு புறப்பட்டனர்.

    முன்னதாக, கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நாமக்கல் மாவட்டத்தில் இருந்தும் பஸ்கள் மூலம் அனைவரும் அழைத்து வரப்பட்டனர். பின்னர் அனைவருக்கும் கை கழுவ சோப்பு வழங்கப்பட்டு, பாதுகாப்பாக வழியனுப்பி வைக்கப்பட்டனர். தாங்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பாக ஏற்பாடு செய்து, வழியனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணையிட்ட முதல்-அமைச்சருக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நன்றி தெரிவித்து புறப்பட்டனர்.

    நேற்று அனுப்பி வைக்கப்பட்டவர்களையும் சேர்த்து, இதுவரை கரூர் மாவட்டத்தில இருந்து உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், மராட்டியம், ஜார்கண்ட், ராஜஸ்தான், பீகார், உத்தரகாண்ட், ஜம்முகாஷ்மீர், மணிப்பூர், அசாம், ஒடிசா, மேற்குவங்காளம், பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 2,396 பேர் பாதுகாப்பாக அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, சேலம் கோட்ட ரெயில்வே முதுநிலை போக்குவரத்து மேலாளர் ஹரிக்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் ரெங்கராஜன், கரூர் ரெயில் நிலைய மேலாளர் ராஜராஜன், தாசில்தார்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×