search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் கேன்
    X
    குடிநீர் கேன்

    கேன் குடிநீர் உரிமையாளர்கள் 4-வது நாளாக போராட்டம்

    கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் 4-வது நாளாக தொடர்ந்த வேலை நிறுத்த போராட்டத்தால், பல்வேறு இடங்களில் கேன் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர்.

    சென்னை:

    தமிழகத்தில் ‘மினரல் வாட்டர்’ பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மினரல் பாட்டில் வாங்கினால் கட்டுப்படியாகாது என்பதால் கேன் குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    இதற்காக வணிக நோக்கத்தில் தனியார் நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து வருகின்றன.

    சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், மாவட்டங்கள் மட்டுமின்றி கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட மற்ற மாவட்டங்களிலும் ராட்சத மோட்டார் பொருத்தி நிலத்தடி நீரை உறிஞ்சி கேன் வாட்டர் விற்பனை செய்கின்றனர்.

    இதன் காரணமாக தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 300 முதல் 500 அடிக்கு கீழே சென்றுவிட்டது.

    இதனால் நிலத்தடி நீர் எடுக்ககட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பல இடங்களில் விதிகளுக்கு புறம்பாக தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதாக அரசுக்கு புகார்கள் சென்றன.

    சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை புழலை சேர்ந்த சிவமுத்து என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இதை விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோதமாக செயல்படும் நிறுவனங்களை உடனடியாக மூட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக செயல்படும் குடிநீர் ஆலைகளை கண்டறிந்து அந்த நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.

    தற்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் 470 கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 1,689 குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதில் 568 குடிநீர் உற்பத்தி நிறுவனம் மட்டுமே அனுமதி பெற்று செயல்படுகிறது. மற்ற நிறுவனங்கள் எந்தவித அனுமதியும் பெறாமல் செயல்படுகிறது.

    இதனால் சட்ட விரோதமாக செயல்படும் ஆலைகளில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள் 300-க்கும் மேற்பட்ட ஆலைகளுக்கு சீல் வைத்தனர். திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் வித்யா மேற்பார்வையில் 22 கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

    திருச்சியில் 23 நிறுவனம் கரூரில் 8, கடலூரில் 28, விழுப்புரத்தில் 13, கிருஷ்ணகிரியில் 61, சேலம் 42, நாமக்கல்லில் 17, தர்மபுரியில் 9, ஈரோட்டில் 30 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமத்தை எளிய முறையில் பெறுவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு உருவாக்க வலியுறுத்தி கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் கடந்த வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டிருந்த கேன் குடிநீர் கடந்த 2 நாட்களாக வீடுகள், கடைகள், ஓட்டல்களுக்கு வினியோகிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் நேற்று பரவலாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் கடைகளில் கேன் குடிநீர் ரூ.50 வரை விலை உயர்ந்து விட்டது.

    இது குறித்து கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ராஜசேகரன் கூறியதாவது:-

    நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் எளிய முறையில் பெறுவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு விரைவில் உருவாக்கி எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். பேச்சுவார்த்தை நடத்த அரசு தரப்பில் எந்த அழைப்பும் வரவில்லை.

    மக்கள் நலன் கருதி உடனடியாக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதற்கு ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், “சட்டத்துக்கு உட்பட்டு குடிநீர் ஆலைகளுக்கு அனுமதி கொடுக்க அரசு தயாராக இருப்பதாகவும், கோர்ட்டு தெரிவித்துள்ள வழிமுறையை அரசு பின் பற்றும்.

    சென்னையில் குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க குடிநீர் வாரியம் மூலம் மாற்று வழிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    ஆனாலும் இன்று 4-வது நாளாக ‘கேன் வாட்டர்’ நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    குறைந்த அளவில் சப்ளை செய்யப்படும் கேன் குடிநீர் அதிக விலைக்கும் விற்கப்படுகிறது.

    Next Story
    ×