search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திருப்பத்தூரில் பொது கழிவறை சுத்தம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

    திருப்பத்தூரில் கடந்த 8 நாட்களாக பொது கழிவறையை சுத்தம் செய்யாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் 32-வது வார்டு கவுதம் பேட்டை பகுதியில் சுமார் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான வீடுகளில் தனிநபர் கழிவறை இல்லை.

    இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுக்கழிவறையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கழிவறையில் போர்வெல் அமைக்கப்பட்டு அதன் மூலம் தினமும் சுத்தம் செய்து வருகின்றனர்.

    கடந்த 8 நாட்களுக்கு முன்பு போர்வெல் பழுது ஏற்பட்டது. இதனால் கழிவறைக்கு தண்ணீர் வசதியில்லை. அப்பகுதி பெண்கள் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுபற்றி நகராட்சி அலுவலகத்திற்கு சென்று கமி‌ஷனர் சுதாவை சந்திக்க முயற்சி செய்துள்ளனர்.

    அப்போது அவர் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் துப்புரவு சம்பந்தப்பட்ட  ஊழியர்களை சந்திக்க முடியவில்லை இதனையடுத்து இன்று காலை 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருவண்ணாமலை சாலையில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் திருப்பத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×