search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    சிவகாசியில் சிறுமி பாலியல் பலாத்கார கொலையில் 4 பேர் சிக்கினர்

    சிவகாசியில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    சிவகாசி அருகே 8 வயது சிறுமி, காட்டுப்பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

    கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் உத்தரவுப்படி 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    வட மாநில வாலிபர்களுக்கு கொலையில் தொடர்பு இருக்கலாம் என கருதினர். அதன் பேரில் அந்த பகுதியில் தங்கி வேலை பார்க்கும் வட மாநில வாலிபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் 3 பேர் போலீசில் சிக்கி உள்ளனர். அவர்களுக்கு உதவியதாக உள்ளூர் வாலிபர் ஒருவரையும் போலீசார் பிடித்துள்ளனர். 4 பேரையும் ரகசிய இடம் கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று சிறுமியின் வீட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தனது சொந்த பணம் ரூ.3 லட்சத்தை வழங்கிய அவர் குற்றவாளிகளை விரைவில் கண்டு பிடித்து உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என உறுதி அளித்தார்.

    தொடர்ந்து சிறுமி பிணமாக கிடந்த இடத்தையும் அவர் பார்வையிட்டார். மாவட்ட கலெக்டர் கண்ணன், போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், சிவகாசி துணை சூப்பிரண்டு பிரபாகரன் ஆகியோரும் அமைச்சருடன் சென்றனர். அப்போது அங்கு திரண்டமக்கள் குற்றவாளிகளை ஓரிருநாளில் பிடிக்க வேண்டும் என்றனர்.

    அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி அளித்தார்.

    Next Story
    ×