search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஆவடியில் மாயமான 10-ம் வகுப்பு மாணவிகள் 4 பேர் பெங்களூரில் மீட்பு

    ஆவடியில் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற 10-ம் வகுப்பு மாணவிகள் 4 பேர் பெங்களூருவில் மீட்கப்பட்டார்கள்.
    ஆவடி:

    காமராஜர் நகர் பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 4 பேர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார்கள். பள்ளிக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து சென்றவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை.

    இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர்கள் ஆவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் மாயமான 4 மாணவிகளும் பெங்களூரில் இருப்பது தெரிந்தது.

    அம்பத்தூர் துணை கமி‌ஷனர் ஈஸ்வரன் உத்தரவின்படி ஆவடி சரக போலீஸ் உதவி கமி‌ஷனர் சத்தியமூர்த்தி மேற்பார்வையில் தனிப்படை போலீசார் மாணவிகளின் பெற்றோர்களை அழைத்துக்கொண்டு பெங்களூர் விரைந்தனர்.

    தனிப்படை போலீசார் பெங்களூர் போலீசார் உதவியுடன் பெங்களூர் ரெயில் நிலையத்தில் இருந்த நான்கு மாணவிகளையும் மீட்டனர். பின்னர் அவர்களை நேற்று நள்ளிரவில் ஆவடிக்கு அழைத்து வந்தனர்.

    மாணவிகள் 4 பேரும் செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டு இருப்பதால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவ்வப்போது கண்டித்தனர். இது பிடிக்காத மாணவிகள் பள்ளிக்கு போகாமல் பெங்களூர் சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
    Next Story
    ×