search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பால்
    X
    பால்

    திங்கட்கிழமை முதல் தனியார் பால் விலை உயருகிறது

    தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை வருகிற 20-ந்தேதி முதல் லிட்டருக்கு ரூ.4 விலை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.
    சென்னை:

    தமிழகத்தில் மொத்த பால் விற்பனையில் 84 சதவிதம் தனியார் பால் நிறுவனங்களும் 16 சதவீதம் அரசின் ஆவின் பால் நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது. தனியார் பால் நிறுவனங்கள் கடந்த ஆண்டு 3 முறை பால் விலையை உயர்த்தியது.

    இந்த நிலையில் புதிய ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்துவதாக அதன் மொத்த விற்பனையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    பால் தட்டுப்பாடு காரணமாக கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதாக காரணம் கூறப்பட்டுள்ளது.

    ஆரோக்யா, டோட்லா, ஹெரிட்டேஜ் போன்ற பால் நிறுவனங்கள் நாளை மறுநாள் திங்கட்கிழமை முதல் பால், தயிர் விலையை உயர்த்துகின்றன. பால் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் 6 வரையிலும் தயிர் விலை லிட்டருக்கு ரூ.2-ம் உயர்த்தப்படுகிறது.

    சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ.48-ல் இருந்து ரூ.50 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ.52-ல் இருந்து ரூ.56 ஆகவும் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.60-ல் இருந்து ரூ.62 ஆகவும் உயர்கிறது. தயிர் லிட்டர் ரூ.58-ல் இருந்து ரூ.62 ஆகவும் அதிகரிக்கிறது.

    தனியார் பால் விலை திடீரென உயருவதால் அதனை அதிகமாக பயன்படுத்தும் ஓட்டல்கள், டீ கடைகளில் விலை உயருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சிறிய டீ கடைகளில் ஒரு டீ ரூ.10-க்கு விற்கப்படுகிறது.

    இந்த நிலையில் மீண்டும் பால் விலை உயர்வதால் பொது மக்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது.

    தனியார் பால் விலை உயர்வதால் ஏழை-எளிய குடும்பங்களில் பட்ஜெட் துண்டு விழும். தனியார் நிறுவனங்களில் மாத சம்பளம், தினக்கூலி வேலை செய்து வரும் தொழிலாளர்கள், சிறிய கடைகள், நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய குடும்பங்கள் இந்த கூடுதல் செலவினத்தை எதிர் கொள்ள தயங்குவர்.

    தனியார் பால் விலை உயரும் பட்சத்தில் ஆவின் பாலுக்கு மீண்டும் கடுமையான கிராக்கி ஏற்படக்கூடும். ஆவின் பாலுக்கும் தனியார் பாலுக்கும் விலை லிட்டருக்கு ரூ. 5 முதல் ரூ. 10 வரை வித்தியாசம் உள்ளது.

    ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்) ஒரு லிட்டர் ரூ. 47, சமன்படுத்தப்பட்ட பால் (நீலம்) ரூ. 43, செறியூட்டப்பட்ட பால் (ஆரஞ்ச்) ரூ. 51 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலையை விட கூடுதலாக ரூ. 3 விலைக்கு எல்லா கடைகளிலும் விற்கப்படுகிறது. ஆனாலும் கூட தனியார் பாலை விட விலை குறைவாக உள்ளது.

    தனியார் பால் விலை உயர்வு குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:-

    தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ. 4 வீதம் பால் விலையை திங்கட்கிழமை முதல் உயர்த்த முடிவு செய்துள்ளது. தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்த அனுமதிக்கக்கூடாது.

    அரசின் அனுமதியுடன் தான் பால் விலையோ, கொள்முதல் விலையோ கூட்டவோ, குறைக்கவோ வேண்டும். இதற்கான சட்டம் கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

    டாஸ்மாக் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பது போல் ஆவின் பால் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்க வேண்டும். அப்போது தனியார் நிறுவனங்களை கட்டுப்படுத்த முடியும்.

    ஆண்டுக்கு 2, 3 முறை தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி செல்வதால் பொது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அத்தியாவசிய தேவையான பால் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். அரசின் கட்டுப்பாட்டில் கீழ் விலை நிர்ணயம் செய்ய விதிமுறைகளை காண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×