search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    களக்காடு அருகே விவசாயி மீது தாக்குதல் - மருமகன் உள்பட 2 பேர் மீது வழக்கு

    களக்காடு அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக மருமகன் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    களக்காடு:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கீழகுத்தபாஞ்சான் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 57), விவசாயி. இவரது மகளுக்கும், களக்காடு அருகே உள்ள கீழப்பத்தை கீழத்தெருவை சேர்ந்த வேல்சாமி மகன் இளங்கோ (25) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் இளங்கோ அவரது மனைவியை அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியை அடித்து வீட்டை விட்டு விரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வராஜ் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இரு தரப்பினரையும் அழைத்து பேசிய போலீசார் இளங்கோவிடம் மனைவியுடன் சேர்ந்து குடும்பம் நடத்தும்படி கூறியுள்ளனர்.

    இதையடுத்து செல்வராஜ் தனது மகளை இளங்கோ வீட்டில் கொண்டு விடுவதற்காக சென்றார். அப்போது இளங்கா, அவரது தாயார் இசக்கியம்மாள் ஆகியோர் செல்வராஜை தாக்கினர். மேலும் உனது மகள் இங்கு வரக்கூடாது, மீறி அழைத்துவந்தால் உன்னையும், உனது மகளையும் கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

    உடனே அதிர்ச்சியடைந்த செல்வராஜ் இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது தொடர்பாக இளங்கோ, அவரது தாயார் இசக்கியம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×