search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    மன்னார்குடி அருகே மாரியம்மன் கோவிலில் நகை-பணம் கொள்ளை

    மன்னார்குடி அருகே மாரியம்மன் கோவிலின் உண்டியலை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மன்னார்குடி:

    மன்னார்குடி அருகே உள்ள கோட்டூர் கிராமத்தில் கொழுந்தாளை மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர்.

    நேற்று இரவு கோவிலில் பூஜைகள் முடிந்து கேட் பூட்டப்பட்டது. இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் அங்கு வந்து காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தனர். பின்னர் கோவிலின் கதவின் பூட்டை உடைத்து கோவிலுக்குள் சென்றனர். அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கதவு திறக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து கோவிலுக்குள் சென்றனர். அங்கு உண்டியல் உடைக்கப்பட்டு சில்லரை காசுகள் சிதறி கிடந்தன.

    உடனடியாக இது குறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்கள் வந்து சென்றதற்கான காட்சிகள் உள்ளனவா? என வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இது பற்றிய புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×