search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பொள்ளாச்சி மார்க்கெட்டில் 30 மூட்டை பூண்டு திருடிய ஆட்டோ டிரைவர் கைது

    பொள்ளாச்சி மார்க்கெட்டில் 30 மூட்டை பூண்டு திருடிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி மீன்கரை ரோடு காந்தி நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 46). இவர் தேனியில் இருந்து வெள்ளைப் பூண்டுகளை கொள்முதல் செய்து பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று சக்திவேல் தேனியில் இருந்து கொள்முதல் செய்த 30 மூட்டை வெள்ளைப் பூண்டுகளை ஒரு ஆட்டோவில் ஏற்றி கொண்டு பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டிற்கு கொண்டு வந்தார்.

    பின்னர் வெள்ளைப்பூண்டுகளை ஆட்டோவில் வைத்து பூட்டி விட்டு மீண்டும் வெள்ளைப்பூண்டு கொள்முதல் செய்வதற்காக தேனிக்கு சென்றார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன் பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டிற்கு வந்தார். பின்னர் அங்கு தான் நிறுத்தி விட்டு சென்ற ஆட்டோவை திறந்து பார்த்தார். அப்போது ஆட்டோவில் வைக்கப்பட்டிருந்த வெள்ளைப்பூண்டு மூட்டைகளை காணவில்லை. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தார். ஆனால் யாருக்கும் தெரியவில்லை.

    இதுகுறித்து சக்திவேல் பொள்ளாச்சி மேற்கு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து வெள்ளைப்பூண்டு திருடியவர்களை தேடி வந்தனர்.

    இதில் வெள்ளைப்பூண்டை திருடி சென்றது நெகமத்தை சேர்ந்த ஜெயசூர்யா(22) என்பதும், இவர் ஆட்டோ டிரைவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நெகமத்திற்கு சென்று ஜெயசூர்யாவை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஜெயசூர்யா தனது நண்பர் பாலன் என்பவருடன் சேர்ந்து பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் நின்ற ஆட்டோவில் இருந்த 30 மூட்டை வெள்ளைப் பூண்டை திருடியது ஒப்புக் கொண்டார்.

    இதையடுத்து போலீசார் ஜெயசூர்யாவை கைது செய்தனர். இந்த நிலையில் ஜெயசூர்யா கைதானது தெரிந்த அவரது நண்பர் பாலன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×