search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டம்

    பெரம்பலூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    பெரம்பலூர்:

    தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவன தலைவர் நாராயணசாமியின் 35-வது ஆண்டு நினைவு நாளையொட்டி நேற்று பெரம்பலூரில், மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார். வேப்பூர் வட்டார தலைவர் செல்லகருப்பு, பெரம்பலூர் மாவட்ட துணை செயலாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேசினார். தொடர்ந்து சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் விசுவநாதன் தலைமையில் சங்கத்தினர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள நாராயணசாமியின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் விவசாயிகள் திடீரென்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது அவர்கள் பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை ரூ.39 கோடியை உடனடியாக மத்திய அரசு வழங்குவதற்கு மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.

    பெரம்பலூர் சர்க்கரை ஆலை நலிவடைந்த ஆலையாக மத்திய அரசால் கடந்த 2000-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இதனால் ஆலையில் தேங்கியுள்ள 81 ஆயிரம் குவிண்டால் சர்க்கரையை விற்க மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி பெற்று கொடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தில் ஏற்பட்ட வேரழுகல் என்கிற திருகல் நோயால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் வெங்காயத்தில் திருகல் நோய் வராமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

    மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் அடுத்த மாதம் (ஜனவரி) 7-ந் தேதி அறிவிக்கப்பட்டிருந்த தமிழக விவசாயிகள் சங்க போராட்டம் ரத்து செய்யப்பட்டு, அதே கோரிக்கைகளை வலியுறுத்தி 8-ந் தேதி நாடு முழுவதும் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் விவசாயிகள் கலந்து கொள்வார்கள். அன்றைய தினம் பெரம்பலூர் பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு நடைபெறும் போராட்டத்திலும், அரியலூரில் நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்திலும் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொள்வார்கள் என்று சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் தெரிவித்தார்.
    Next Story
    ×