search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவிபத்து (கோப்புப்படம்)
    X
    தீவிபத்து (கோப்புப்படம்)

    தியாகராயநகரில் சேகர்ரெட்டி அலுவலகத்தில் தீவிபத்து

    சென்னை தியாகராயநகரில் உள்ள சேகர் ரெட்டியின் அலுவலகத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரம் போராடி தீ கட்டுப்படுத்தப்பட்டது.

    சென்னை:

    சென்னை தியாகராய நகர் விஜயராகவா ரோட்டில் சேகர்ரெட்டிக்கு சொந்தமான 4 மாடி கட்டிடம் உள்ளது.

    இந்த கட்டிடத்தின் மூன்று மாடிகள் காலியாக உள்ளன. 4-வது மாடியில் சேகர் ரெட்டியின் அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் அவர் நடத்திவரும் ‘காண்டிராக்டு’ தொழில் தொடர்பான ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறது. 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    நேற்று மாலையில் பணி முடிந்து அலுவலகத்தை பூட்டி சென்றனர். காவலாளி கீழ் தளத்தில் அமர்ந்து இருந்தார்.

    இன்று காலை 7.30 மணி அளவில் 4-வது தளத்தில் இருந்த சேகர்ரெட்டி அலுவலகத்தில் இருந்து புகை வெளிவந்து கொண்டிருந்தது. அதை பார்த்ததும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து தேனாம்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஸ்கைலிப்ட் வாகனம் மூலம் அலுவலகத்தின்மேல் பகுதிக்கு சென்று கண்ணாடிகளை உடைத்து தீயை அணைத்தனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீ கட்டுப்படுத்தப்பட்டது.

    இருப்பினும் முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிட்டன. இதுபற்றி தி.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. தீவிபத்து நடந்த அலுவலகத்தை சேகர்ரெட்டியும் அவரது குடும்பத்தினரும் பார்த்தனர்.
    Next Story
    ×