search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sekhar reddy"

    தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் சி.பி.ஐ. சோதனை நடத்தி செல்லாத நோட்டு அறிவிப்பின்போது சட்ட விரோதமாக புதிய பணம் பதுக்கியவர்கள் மீது நாகேஷ்வரராவ் நடவடிக்கை எடுத்தார். #CBIDirector #NageswaraRao
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக்வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் லஞ்சப் புகார் காரணமாக நீக்கப்பட்டு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டது.

    புதிய சி.பி.ஐ. இயக்குனராக தற்காலிகமாக இணை இயக்குனராக இருந்த நாகேஷ்வரராவ் நியமிக்கப்பட்டுள்ளார். அதிகாலையில் பதவி ஏற்ற அவர் அடுத்தடுத்து பல நடவடிக்கைகளை எடுத்தார். அலோக் வர்மா மற்றும் அஸ்தானா மீதான ஊழல் புகார்கள் பற்றி விசாரிக்க புதிய குழுவை நியமித்தார்.

    மேலும் 14 அதிகாரிகளை அதிரடியாக இடம் மாற்றம் செய்தும் உத்தரவிட்டார். சி.பி.ஐ.யில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதிரடி நடவடிக்கையின் கதாநாயகனான நாகேஷ்வர ராவ் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர். வாரங்கல் மாவட்டம் மங்க பேட்டா மண்டலம் போரு நர்சாபுரம் என்ற குக்கிராமத்தில் பிறந்தார். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.

    மங்கபேட்டா அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தார். ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்துக் கொண்டு இருந்த போது சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.பி.எஸ். பணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

    ஒடிசாவில் பணி நியமனம் செய்யப்பட்ட பின்னர் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும்பாலும் பணியாற்றினார். ஒடிசா மாநில டி.ஐ.ஜி.யாகவும் பதவி வகித்தார். கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் உள்ள தென் மண்டல சி.பி.ஐ. இணை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

    இவர் பொறுப்பேற்ற பின்புதான் தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. செல்லாத நோட்டு அறிவிப்பின்போது சட்ட விரோதமாக புதிய பணம் பதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார்.

    ஜெயலலிதா மரணத்துக்கு பின்பு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டபோது மேலிட உத்தரவுப்படி அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு நெருக்கமான இடைத்தரகர்கள், தொழில் அதிபர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கைப்பற்றப்பட்ட ரூ.90 கோடியில் ரூ.70 கோடி புதிய நோட்டுகள் ஆகும். 100 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது.

    கோப்புப்படம்

    காண்டிராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனையிலும் பணம், நகைகள் கைப்பற்றப்பட்டது. முன்னதாக தமிழக சட்டசபை தேர்தலின்போது நடந்த சோதனையும் தமிழகத்தையே உலுக்கி எடுத்தது. இதன் காரணமாக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டன.

    இவை அனைத்தும் அ.தி.மு.க. ஆதரவைப் பெறுவதற்காக பா.ஜனதா நடத்தியது என்று அரசியல் ரீதியாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் நாகேஷ்வரராவ் முக்கிய பங்கு வகித்தார் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. #CBIDirector #NageswaraRao
    சேகர்ரெட்டிக்கு 131 கிலோ வெளிநாட்டு தங்க கட்டி கிடைத்தது எப்படி என்பது தொடர்பாக வருவாய் புலனாய்வுத்துறை விசாரணையை தொடங்கி உள்ளது. #SekharReddy
    சென்னை:

    மணல் குவாரி அதிபர் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மிகப் பெரிய அளவில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

    அப்போது ரூ.34 கோடிக்கு 2000 புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் ஏராளமான சொத்து ஆவணங்கள், ரொக்க பணங்கள் மற்றும் பல்வேறு வகை சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன.

    இவற்றுடன் 178 கிலோ தங்க கட்டிகளை கைப்பற்றினார்கள். அவற்றில் 131 கிலோ வெளிநாட்டு தங்க கட்டிகள் ஆகும்.

    இவை எந்த வருமானத்தில் வாங்கப்பட்டது? என்பது குறித்து தொடர்ந்து வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    ஆனால், 178 கிலோ தங்கத்தில் 131 கிலோ வெளிநாட்டு தங்க கட்டிகளாக இருப்பதால், அது கடத்தலாக கருதப்பட்டது. இதன் மீது வேறு முறையில் விசாரணை நடந்து வருகிறது.

    ஒருவர் வெளிநாட்டு தங்க கட்டிகள் வைத்திருந்தால் அந்த கட்டிகள் எப்படி கிடைத்தன? முறைப்படி அனுமதியுடன் கொண்டு வரப்பட்டதா? அதற்கான சுங்கவரி, அபராதம் போன்றவை செலுத்தப்பட்டதா? என்ற விவரங்களை அரசுக்கு வழங்க வேண்டும்.



    ஆனால், இவர் வைத்துள்ள 131 கிலோ வெளிநாட்டு தங்கம் குறித்து எந்த தகவலும் அளிக்கப்படவில்லை.

    இந்த தங்க கட்டிகளில் சுயூசி என்ற ஆங்கில முத்திரை உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்படும் தங்கத்தில் தான் இந்த முத்திரைகள் இருக்கும்.

    மேலும் ஒவ்வொரு தங்க கட்டியும் ஒரு கிலோ எடை கொண்டதாக இருந்தது. ஒரு கிலோ எடையில் இந்தியாவில் தங்க கட்டிகள் தயாரிப்பது இல்லை.

    எனவே, இந்த தங்க கட்டிகள் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்டவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    அதற்கான சுங்க வரிகளோ, அபராதமோ கட்டியதற்கான எந்தவித ஆதாரங்களையும் சேகர் ரெட்டி வருமான வரித்துறையிடம் கொடுக்கவில்லை.

    எனவே, கடத்தல் தங்கம் என்ற அடிப்படையில் சேகர் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க உள்ளனர். சுங்க வரி சட்டம் 123-வது பிரிவின் படி சேகர் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்கலாம்.

    இதுபோன்ற வி‌ஷயங்களை மத்திய வருவாய்த்துறையின் புலனாய்வு பிரிவு விசாரிப்பது வழக்கம்.

    இப்போது அந்த துறை விசாரணையை தொடங்கி உள்ளது. வருவாய் புலனாய்வு துறை ஒரு வாரத்துக்கு முன்பு சேகர் ரெட்டிக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது.

    அதேபோல் தங்க கட்டிகளை கைப்பற்றிய வருமான வரித்துறையிடமும் புலனாய்வுத்துறை விளக்கத்தை கேட்டு இருக்கிறது.

    சுங்க வரி சட்டத்தின்படி ஒருவர் ரூ.1 கோடி மதிப்புக்கு மேலான வெளிநாட்டு பொருட்களை வைத்திருந்தால் அவர் மீது ஜாமீனில் வர முடியாத குற்றத்தின் அடிப்படையில் வழக்கு தொடரலாம். அந்த வகையில் சேகர் ரெட்டி மீதும் இதே வழக்கு தொடரப்படும்.

    இதில், குற்றம் உறுதி செய்யப்பட்டால் 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை வழங்கப்படும். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மத்திய அரசின் சொத்தாக கருதப்பட்டு எடுத்து கொள்ளப்படும்.

    சேகர் ரெட்டி ரூ.34 கோடி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வைத்திருந்ததாக சி.பி.ஐ. 2 வழக்கு பதிவு செய்தது. ஆனால், இந்த பணம் எப்படி வந்தது? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சி.பி.ஐ. கூறி விட்டது. இதனால் அந்த வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடியானது.

    இந்த நிலையில் வெளிநாட்டு தங்க கட்டிகள் வைத்திருந்ததற்காக சேகர் ரெட்டி கைது செய்யப்படும் நிலை உருவாகி உள்ளது. #SekharReddy
    ×