search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர்கள் வேலைநிறுத்தம்
    X
    டாக்டர்கள் வேலைநிறுத்தம்

    டாக்டர்கள் வேலை நிறுத்த நாட்களுக்கு சம்பளம் இல்லை- சுகாதாரத்துறை அறிவிப்பு

    ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களுக்கு ஊதியம் வழங்கப்படமாட்டாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கடந்த வாரம் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

    இதனால் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற சென்ற பல ஆயிரக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

    வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு முதல்-அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் டாக்டர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 60 மருத்துவர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

    பணி முறிவு, பணியிட மாற்றம் 17பி போன்ற ஒழுங்கு நடவடிக்கை போராட்டம் டாக்டர்கள் மீது பாய்ந்தது.

    இதையடுத்து போரட்டத்தை தற்காலிகமாக டாக்டர்கள் வாபஸ் பெற்றனர். போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டு டாக்டர்கள் பணிக்கு திரும்பியதால் டாக்டர்கள் மீது எடுக்கப்பட்ட பணி முறிவு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார்.

    ஆனால் பணியிட மாற்றத்தை திரும்ப பெறுவது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் வேலை றிறுத்தத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் சார்பாக, பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 7 நாட்களும் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படமாட்டாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    போராட்ட காலத்தின் போது பணிக்கு வராத மருத்துவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது. எத்தனை நாட்கள் அவர்கள் பணியை புறக்கணித்தனர் என்பது தொடர்பாகவும் தகவல் திரட்டப்பட்டு வருகின்றன. அதன்படி மருத்துவர்கள் பணிக்குவராத நாட்களுக்கான ஊதியம் வழங்கப்படமாட்டாது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×