
எம்.ஜி.ஆர். நகர் ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலை. அ.தி.மு.க.வில் 138-வது வட்ட செயலாளராக உள்ளார்.
இவரது கட்டிடத்தில் நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவர் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார்.
நேற்று மாலை பழனியின் கடைக்கு வந்த 2 பேர் சிப்ஸ் வாங்கினர். பின்னர் சிறிது நேரம் கழித்து குடிபோதையில் வந்த அதே நபர்கள் “சிப்ஸ் சரி இல்லை வேறு கொடு” என்று கேட்டனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் பழனியை அடித்து உதைத்த இருவரும் கடைக்குள் புகுந்து சிப்ஸ் பாக்கெட்கள் மற்றும் தின்பண்டங்களை அள்ளிச் சென்றனர். இதுகுறித்து அண்ணாமலைக்கு பழனி தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாமலை ரகளையில் ஈடுபட்டவர்களிடம் தட்டிக்கேட்டார். அப்போது அங்கு வந்த 8 பேர் கும்பல் அண்ணாமலையை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இதுபற்றி அப்பகுதி மக்கள் எம்.ஜி.ஆர். நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து தகராறில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது அந்த கும்பல் போலீஸ்காரர் பிரபா என்பவரையும் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றனர். தாக்குதலில் ஈடுபட்ட சந்திப் மற்றும் ரகுபதி ஆகிய 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட சந்திப் சட்டக்கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 6 பேரை தேடிவருகிறார்கள்.