search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    உங்கள் மருமகளுக்காக இன்னொருவர் மகளை கொன்றுவிட்டீர்கள் - அதிமுக பிரமுகருக்கு நீதிபதி கண்டனம்

    உங்களது மகன், மருமகளை வரவேற்பதற்காக இன்னொருவருடைய மகளை கொன்றுள்ளீர்கள் என்று அதிமுக பிரமுகருக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    சென்னை பள்ளிக்கரணையில் கடந்த மாதம் அ.தி.மு.க. நிர்வாகி ஜெயகோபால் மகன் திருமணம் நடந்தது.  இதற்காக சாலையின் நடுவே மணமக்களை வாழ்த்தி பேனர்கள் வைக்கப்பட்டன. ஒரு பேனர் காற்றில் பறந்து, சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் மீது விழுந்தது.

    சுபஸ்ரீ

    நிலை தடுமாறி சாலையில் விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார்.

    ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் ஆகியோர் மீது பள்ளிக்கரணை போலீசாரும், பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் ஜாமீன் கேட்டு செங்கல்பட்டு மாவட்ட செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஜெயகோபால் சார்பில் ஆஜரான வக்கீல், ‘ஜெயகோபாலின் மகன் திருமணத்துக்கு அவர் பேனர் எதுவும் வைக்கவில்லை. அவர் மீதுள்ள பாசத்தினால், கட்சிக்காரர்கள் தான் பேனர்கள் வைத்துள்ளனர்.

    சாலைக்கு நடுவே பேனர்களை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மனுதாரருக்கு இல்லை. அவர் மீதான வழக்கின் புலன் விசாரணை முடிந்து விட்டதால், அவருக்கு ஜாமீன் வழங்கவேண்டும்’ என்று வாதிட்டார்.

    அப்போது நீதிபதி, திருமணம் நடந்த உங்களது மகன், மருமகளை வரவேற்பதற்காக இன்னொருவருடைய மகளை கொன்றுள்ளீர்கள் என்று கண்டனம் தெரிவித்தார்.

    சம்பவம் நடந்த பின்னர் பல நாட்கள் ஜெயகோபால் ஏன் தலைமறைவாக இருந்தார்? அவர் உடனடியாக போலீசில் ஏன் சரணடையவில்லை? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    அதற்கு மனுதாரர் வக்கீல், உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார் என்றார். இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதால், விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    Next Story
    ×