search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    தீபாவளிக்கு ரேசன் கடைகளில் ஜவ்வரிசி வினியோகம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

    மதர்சேகோ என்ற திட்டத்தின் அடிப்படையில் ரேசன் கடைகளில் ஜவ்வரிசி வினியோகிக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி பண்டிகைக்கு முன்பாக தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் ரேசன் கடைகள் மூலம் சுமார் 2 கோடி குடும்பங்களுக்கு அரிசி, சர்க்கரை, மண்எண்ணெய், பாமாயில், துவரம் பருப்பு ஆகிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதனை தமிழகத்தில் பெரும்பாலான குடும்பத்தினர் வாங்கி பயனடைந்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசியை ரேசன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, விழுப்புரம், தர்மபுரி உள்பட 9 மாவட்டங்களில் அதிக அளவில் சேகோ சர்வ் ஆலைகள் உள்ளன. இதற்கான தலைமை அலுவலகம் சேலத்தில் உள்ளது.

    சேகோசர்வ் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசியை வட மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். மேலும் விவசாயிகளில் லாபத்தை பெருக்கவும், பொதுமக்களுக்கு தரமான ஜவ்வரிசி கிடைக்கும் வகையிலும், தற்போது ரேசன் கடைகள் மூலமும் ஜவ்வரிசியை விற்பதற்கான நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    இதைத்தொடர்ந்து நாமக்கல் தாலுகா சேகோ சர்வ், ஸ்டார்ச் உற்பத்தி யாளர்கள் சங்கம் சார்பில் செல்லப்பம் பட்டியில் அனைத்து சேகோ ஆலைகளையும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

    இதனை திறந்து வைத்த சேகோ சர்வ் தலைவர் தமிழ்மணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் 450 சேகோ ஆலைகள் இருந்த நிலையில் தற்போது 250 ஆலைகள் மட்டுமே உள்ளன. சேகோ தொழிலை மேம்படுத்தும் வகையில் வடமாநிலங்களுக்கு நேரடியாக ஜவ்வரிசியை எடுத்து சென்று விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    இது தவிர மதர்சேகோ என்ற திட்டத்தின் அடிப்படையில் ரேசன் கடைகளில் ஜவ்வரிசி வினியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி பண்டிகைக்கு முன்பாக தொடங்கி வைக்கிறார். மாவட்ட வாரியாக எவ்வளவு ஜவ்வரிசி தேவை என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    மேலும் ஜவ்வரிசி மூலம் என்னென்ன உணவு தயார் செய்யலாம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு வாகனம் ஒன்று மாநிலம் முழுவதும் சுற்றி வர உள்ளது. அதற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது. விரைவில் அந்த வாகனம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    மரவள்ளி கிழங்கை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக சேகோசர்வ் நிர்வாகமே கொள்முதல் செய்து ஆலை உரிமையாளர்களுக்கு வழங்க உள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள சேகோசர்வ் ஆலைகளில் சேகோ ஆலை களை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு மையம் திறக்கப்பட்டு வருகிறது.

    முதல் கட்டமாக நாமக்கல் செல்லப்பம்பட்டியில் இந்த கண்காணிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது. ஜவ்வரிசியில் கலப்படம் என்ற அவதூறை போக்கவும், எந்தவித கெடுதலும் இல்லாத உணவு பொருள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    தற்போது சேகோ ஆலைகளில் நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் மூட்டை ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 10 லட்சம் மூட்டை வரை உற்பத்தியாகிறது. ஓராண்டில் ரூ.460 கோடி வருவாய் ஈட்டும் சேகோ சர்வ் நிர்வாகம் ரூ.1000 கோடியை விற்பனை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. 9 மாவட்டங்களில் மட்டுமே உள்ள சேகோ ஆலைகள் வரும் காலங்களில் அனைத்து மாவட்டங்களிலும் அமையும் என்ற நம்பிக்கை தற்போது ஏற்பட்டு உள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×